ஜிஎஸ்டியை எப்படி வேணும்னாலும் மாத்திக்கட்டும்... விலையை மாற்றாமல் விடாப்பிடியா இருக்கும் பைக் கம்பெனி!
120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தைக் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம், மத்திய அரசாங்கம் ஜிஎஸ்டியில் திருத்தங்களை கொண்டுவந்த போதிலும் அதன் பிரபலமான 400சிசி பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-Showroom Prices) எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளது.
350சிசி-க்கு மேல் உள்ள மோட்டார்சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-இல் இருந்து 40% ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்ட போதிலும், டிரையம்ப் நிறுவனத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பைக் நிறுவனமான டிரையம்ப் இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது என்பது உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதேபோல், கேடிஎம் (KTM) நிறுவனமும் பஜாஜின் கீழ் தான் செயல்படுகிறது. பஜாஜின் கீழ் செயல்படும் எந்த நிறுவனமும் அவற்றின் 350சிசி-க்கு மேல் உள்ள விலை குறைவான பைக்குகளின் விலைகளை அதிகரிக்கவில்லை. அதன்படி, டிரையம்ப் நிறுவனமும் அதன் 400சிசி பைக்குகளின் விலையை அதிகரிக்காதது, இந்திய மோட்டார்சைக்கிள் துறையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கான பைக்குகளின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் பிரிவில், டிரையம்ப் ஸ்பீடு 400 (Speed 400), ஸ்பீடு டி4 (T4), ஸ்க்ராம்ப்ளர் 400X (Scrambler 400X) மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரக்ஸ்டன் 400 (Thruxton 400) போன்ற பைக்குகள் வலுவான இடத்தைப் பிடித்துள்ளன.

இதனால், டிரையம்ப்பின் விலை அதிகரிப்பு இல்லை என்கிற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேற்கூறப்பட்ட டிரையம்ப்பின் 400சிசி பைக்குகள் பாரம்பரிய வடிவமைப்பு, நவீன செயல்திறன் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் கலவையால், புதிய தலைமுறை பைக் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இந்த பைக்குகள் முக்கிய பங்களித்துள்ளன. தற்போதைய அறிவிப்பு குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் புரோபைக்கிங் பிரிவின் தலைவர் மணிக் நாங்கியா பேசுகையில், "டிரையம்ப் 400சிசி பிளாட்ஃபார்ம் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் மதிப்பு ஆகியவற்றில் புதிய தரநிலைகளை உருவாக்கியுள்ளது.

ஜிஎஸ்டி அதிகரித்த போதிலும், பைக் பிரியர்கள் அதிக செலவுகளால் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் விரும்பினோம். விலைகளை நிலையாக வைத்திருப்பதன் மூலம், டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இந்தியாவில் டிரையம்ப் பிராண்டின் வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று கூறினார்.
நீண்ட சர்வீஸ் இண்டர்வெல்ஸ், குறைந்த பராமரிப்புச் செலவுகள், உலகளாவிய பொறியியலின் ஆற்றல், பஜாஜின் புனேவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் தற்போது எக்ஸ்-ஷோரூம் விலையில் எந்த அதிகரிப்பும் இல்லாமல், டிரையம்ப் அதன் பிரிவில் சிறந்த மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதேபோன்று, கேடிஎம் நிறுவனமும் அதன் 390சிசி பைக்குகளின் விலைகளை அதிகரிக்க போவதில்லை என சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 1902ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு பைக் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கிலாந்து, பிரேசில், இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நடவடிக்கையானது டிரையம்ப் நிறுவனத்தின் 'வாடிக்கையாளர்களுக்கு முதலிடம்' என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த மோட்டார் சைக்கிள்களின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் நீண்டகால நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது. இந்த நடவடிக்கையால் நிச்சயமாக டிரையம்ப் 400சிசி பைக்குகளின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









