எத்தனை பைக் கம்பெனிக்கு இந்த மனசு வரும்? ஜிஎஸ்டி மூலம் நெருக்கடி கொடுத்தாலும் முயற்சியை கைவிடல!!
120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் பாரம்பரியம் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), அதன் பிரபலமான விலை குறைவான பைக்குகளான ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்பீடு டி4 (Speed T4) ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. 350சிசி-க்கு மேல் உள்ள மோட்டார்சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி (GST) 40% ஆக உயர்ந்துள்ள போதிலும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாகனத்துறைக்கு மாறாக, பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப், அதிகரித்த சுமையை தானே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியைச் சேர்த்துள்ளதாக டிரையம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

டிரையம்ப்பின் இந்த விலை குறைப்பின்படி, டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) இப்போது ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 754 ஆகக் குறைந்துள்ளது (முன்பு ரூ.2,50,551). அதே சமயம், ஸ்பீடு டி4 பைக் இப்போது ரூ.1,92,539 விலையில் கிடைக்கிறது (முன்பு ₹2,06,738).
விலையை பார்த்தவுடனே தெரிந்திருக்கும்... ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் ஸ்பீடு டி4 விலை குறைவானது என்று. கூடுதலான விலைக்கு ஏற்ப ஸ்பீடு 400 பைக்கில் அதிகப்படியான என்ஜின் பவர், ரைடு-பை-வயர் டெக்னாலஜி, ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டைலிஷான ஹேண்டில்பார்-முனை கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்பீடு பைக்குகள் விரைவாக மார்க்கெட்டில் வளர்ந்து வரும் பைக்குகள் ஆகும். 2023-24 நிதியாண்டு முதல் இவற்றின் மாத விற்பனை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களுக்கான வளர்ந்து வரும் விருப்பத்தின் மீது பிராண்டிற்கு உள்ள வலுவான வரவேற்பை உறுதிப்படுத்துகிறது.
இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, நடுத்தர அளவிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் தனது தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டு, இந்திய ஓட்டுநர்களிடையே தனது வரம்பை விரிவுப்படுத்துவதை டிரையம்ப் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் புரோபைக்கிங் தலைவரான மணிக் நங்கியா கூறுகையில், "ஸ்பீடு 400 மற்றும் ஸ்பீடு டி4 பைக்குகள் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் அணுகல் ஆகியவற்றில் புதிய தரநிலைகளை அமைத்துள்ளன."

"விலை குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி சுமையை நாங்களே ஏற்றுக் கொண்டதன் மூலம், இந்திய சந்தை மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மீது டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ கவனம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. ஸ்பீடு பைக்குகள் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த மதிப்பினை பெறுவதை இது உறுதி செய்யும்."
"2023-24 நிதியாண்டு முதல் மாத விற்பனை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி திருத்தத்திற்கு முன்பு வரையில் டிரையம்ப் பைக்குகள் தேவை வலுவாக உயர்ந்தது, இது வாடிக்கையாளர்கள் டிரையம்ப் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் தெளிவான பிரதிபலிப்பாகும். இந்த வேகத்தை தொடர்ந்து தக்கவைப்போம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று அவர் கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கை ஆனது அதன் நீண்டகால தொலைநோக்கு பார்வையான, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் நவீன பொறியியலை இணைக்கும் வகையிலான பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இன்னும் சில காலத்திற்கு ஜிஎஸ்டி திருத்தத்தால் உருவாகியுள்ள விலையுயர்ந்த பைக்குகளின் விலைகளை உயர்த்த வேண்டிய சூழலை டிரையம்ப் நிறுவனம் தாமதப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









