டிவிஎஸ் லோகோ தான் இதில் ஹைலைட்டே... மற்ற ஸ்மார்ட் வாட்ச்கள் மாதிரி நினைச்சிடாதீங்க இதையை!!
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலக அளவில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) கம்பெனியும், இந்தியாவின் முன்னணி 'கனெக்டட் லைஃப்ஸ்டைல்' (Connected Lifestyle) பிராண்டான நாய்ஸ் (Noise)-உம் இணைந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 'எலக்ட்ரிக் வாகனம் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) ஒருங்கிணைப்பை' அறிமுகப்படுத்தியுள்ளன.
அதாவது, எலக்ட்ரிக் வாகனத்துடன் ஓட்டுனர் தனது கையில் அணிந்திருக்கும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை இணைக்கலாம். இந்த புதிய நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் கூடுதல் கட்டணத்துடன் 12 மாத நாய்ஸ் கோல்டு சந்தா திட்டத்திலும் கிடைக்கும்.

தற்போதைய இந்திய சூழலில், வாகனத்துடன் மொபைல் போனை இணைப்பதே அதிநவீன அம்சமாக பார்க்கப்படும் நிலையில், வாகனத்துடன் ஸ்மார்ட்வாட்ச்சை இணைப்பது என்பது பலர் கேட்டிராத அம்சம் ஆகும். இதனாலேயே, எலக்ட்ரிக் வாகனத்துடன் ஸ்மார்ட்வாட்ச்சை முதல்முறையாக தாங்கள்தான் இணைத்துக் காட்டியுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது.
இது இந்தியாவிலேயே முதல்முறையாக, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுடன் இணையும் விதத்தை மறுவரையறை செய்கிறது. டிவிஎஸ் ஐக்யூப் (iQube) எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றின் மூலம் இந்த ஒருங்கிணைப்பு சாத்தியமாக்கப்பட்டு உள்ளது. இந்த வாட்ச், வாகனத்தின் நிலை, பேட்டரி குறித்த தகவல்கள், டயர் அழுத்தம் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் போன்ற முக்கியமான தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்க தனிப்பயனாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைக்கடிகாரங்களுக்கே உண்டான அம்சங்களையும் கொண்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப், உள்நாட்டு சந்தையில் 6,50,000 யூனிட் விற்பனை மைல்கல்லை சமீபத்தில்தான் எட்டியது. இதன் மூலம் இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிராண்டாக டிவிஎஸ் மோட்டார் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
நாய்ஸ் நிறுவனத்துடனான இந்த கூட்டணி, ஸ்மார்ட்வாட்சை ஒரு உண்மையான பயணத் துணையாக மாற்றி, வாடிக்கையாளர்களின் வசதிகளை மேலும் மேம்படுத்துகிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் வெறும் 'லைஃப்ஸ்டைல்' சாதனங்கள் என்பதை தாண்டி, உற்பத்தித்திறன் மற்றும் பயணத்திற்கான கட்டுப்பாட்டு மையங்களாக மாறி வருகின்றன. இது தினசரி பயணங்களை மேலும் ஸ்மார்ட்டாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது.

டிவிஎஸ் மோட்டார் மற்றும் நாய்ஸ் நிறுவனங்கள் இணைந்து, கனெக்டட் டெக்னாலஜி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தில் புதியதோர் தரத்தை நிர்ணயித்துள்ளன. இந்தத் துறையில் முதல்முறையான புதுமை புகுத்தப்பட்டு இருப்பது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அனிருதா ஹல்தார் தனது கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது, "தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமைகளை இணைத்து, எதிர்கால பயணங்களை மறுவடிவமைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாய்ஸ் உடனான எங்கள் கூட்டணி இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். இது ஸ்மார்ட்வாட்சை ஒரு 'லைஃப்ஸ்டைல்' சாதனத்திலிருந்து, பயணத்தின் போது ஒரு ஸ்மார்ட்டான உதவியாளராக மாற்றுகிறது.
கனெக்டட் ஸ்மார்ட் வாட்சுடன் டிவிஎஸ் ஐக்யூபை ஒருங்கிணைப்பதன் மூலம், எங்கள் ஓட்டுநர்களுக்கு மேலும் ஸ்மார்ட்டான, பாதுகாப்பான மற்றும் உள்ளுணர்வுடன் கூடிய பயணங்களை நாங்கள் வழங்குகிறோம்" என்றார். இந்த வெளியீடு குறித்துப் பேசிய நாய்ஸ் இணை நிறுவனர் அமித் கத்ரி, "நாய்ஸில், மக்கள் எளிதாக வாழவும், பயணிக்கவும், இணைந்திருக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உடனான இந்த கூட்டணி அந்த திசையில் ஒரு சக்திவாய்ந்த படியாகும்.
ஸ்மார்ட்வாட்சை ஒரு பயணத் துணையாக மாற்றுவதன் மூலம், கையில் ஒரு அர்த்தமுள்ள புதுமையை கொண்டு வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில், ஸ்மார்ட்டான மற்றும் ஒருங்கிணைந்த வழிகளைத் தேடும்போது, இது போன்ற ஒரு புதுமையான அனுபவம், எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நாங்கள் எல்லைகளைத் தாண்டி, பயனுள்ள தொழில்நுட்பத்தை வழங்கி, இந்தியாவில் இணைக்கப்பட்ட வாழ்க்கை முறையின் எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் மொபைல் போன்கள் (Mobile Phones) கையில் அணிய கூடிய கைக்கடிகாரங்களாக மாறும் என்கிற கருத்து பரவலாக பல தொழிற்நுட்ப ஆர்வலர்களிடம் உள்ளது. ஆகையால், வாகனத்துடன் மொபைல் போனை இணைப்பதை தாண்டி, ஸ்மார்ட் வாட்ச்சை இணைப்பதும் அவசியமாகிறது. இது ஸ்மார்ட் வாட்ச்சின் பரிணாம வளர்ச்சியையும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








