உலகமே நம்ம தமிழ்நாட்டு தயாரிப்பை பார்த்து வியக்க போகுது! ஓசூரில் தயாராகும் புது டிவிஎஸ் எலெக்ட்ரிக் பைக்!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை கான்செப்ட் வடிவில் இத்தாலி நாட்டின் மிலனில் தொடங்கவுள்ள 2025 EICMA கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது. பொது மக்களுக்கு நவம்பர் 6ஆம் தேதி முதல் இந்த கண்காட்சி துவங்கினாலும், ஊடக துறையினருக்கு நாளை (நவ.4) முதலே துவங்க உள்ளது.
கடந்த நவ.2 ஞாயிற்று கிழமையில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி சமூக வலைத்தளங்களில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உலக அளவில் அறிமுகமாகவுள்ளதை உறுதிப்படுத்தி ஒரு டீசரை வெளியிட்டது. இது ஒரு "நேக்கட்" மோட்டார்சைக்கிளாகவும், ஸ்டண்ட் செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட "ஸ்ட்ரீட்-ஃபைட்டராகவும்" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டீசரில் பெரிய அளவில் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், நவம்பர் 4ஆம் தேதி மாலை 2:55 மணிக்கு EICMA 2025 கண்காட்சியில் உலக அறிமுகத்திற்கு முன்னதாக முதல் டிவிஎஸ் எலெக்ட்ரிக் பைக் குறித்த சில தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை உடன், சென்னையை தலைமையிடமாக கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது தயாரிப்புகளை 2025 EICMA கண்காட்சி ஹால்-18இல் உள்ள ஸ்டால் I58 இல் காட்சிப்படுத்த உள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, 2025 EICMA கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் 6 புதிய வாகனங்களை காட்சிக்கு நிறுத்த உள்ளது. இத்தாலியின் மிலனில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் விடா வி.எக்ஸ்.இசட் (Vida VXZ) என்ற எலெக்ட்ரிக் நேக்கட் மோட்டார்சைக்கிளும் அறிமுகமாகிறது.
டிவிஎஸ் நிறுவனம், காட்சிப்படுத்தவுள்ள 6 புதிய மாடல்கள் என்னென்ன மாதிரியான தோற்றத்தை கொண்டிருக்கும் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு இல்லை. எனினும், டிவிஎஸ் மோட்டாரின் இரண்டு எலெக்ட்ரிக் நேக்கட் பைக்குகளுடன், நோர்டனின் புதிய நான்கு பைக்குகளும் 2025 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படலாம் என ஊகிக்கப்படுகிறது. ஏனெனில், டிவிஎஸ் மோட்டாரும் ஐரோப்பிய பைக் நிறுவனமான நோர்டனும் கூட்டணியில் உள்ளன.
புதிய எலெக்ட்ரிக் பைக்குகள் குறித்த முதல் டீசரில் C-வடிவ இரட்டை எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், உடல் முழுவதும் ஆரஞ்சு நிற ஹைலைட்கள் மற்றும் ஆரஞ்சு நிற அலாய் சக்கரங்களை கொண்ட எலெக்ட்ரிக் பைக் தென்பட்டது. மேலும், சிவப்பு நிற ஸ்பிரிங்ஸ் கொண்ட பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் டிஸ்க் பிரேக் அமைப்பையும் காண முடிந்தது.

"நேக்கட் மோட்டார்சைக்கிள் அவதாரத்தில் உண்மையான எலெக்ட்ரிக் சக்தியை அனுபவியுங்கள்" என்ற கேப்ஷன் உடன் அந்த டீசரை டிவிஎஸ் விளம்பரப்படுத்தியது. இதனால், புதிய டிவிஎஸ் எலெக்ட்ரிக் பைக்குகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பது மட்டுமின்றி, டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்டேஷன், டிராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல் போன்ற எலக்ட்ரானிக் உதவிகள் மற்றும் முன்னணி அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களிலிருந்து பெறப்பட்ட பிற அம்சங்களையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், தற்போதுள்ள டிவிஎஸ் அப்பாச்சி மோட்டார்சைக்கிள்களை விட ஒரு மேம்பட்ட வடிவமைப்பு தத்துவத்தை நாம் எதிர்பார்க்கலாம். நோர்டன் நிறுவனத்தைப் பொறுத்தவரை, புகழ்பெற்ற பிரிட்டிஷ் பிராண்ட் உலகளவில் நான்கு மோட்டார்சைக்கிள்களுடன் மீண்டும் களமிறங்க தயாராக உள்ளது. இது 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நோர்டன் நிறுவனத்தின் மறுபிரவேசத்தின் மையமாக, புதிய நோர்டன் வி4 சூப்பர்பைக் திகழும். இது பிராண்டின் முன்னணி தயாரிப்பாக நிலைநிறுத்தப்படும். இது இரண்டு மாறுபட்ட வேரியண்ட்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளும் நோர்டனின் இங்கிலாந்தில் உள்ள சோலிஹல் ஆலையில் உருவாக்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 EICMA கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் முதல்முறையாக பங்கேற்பது மற்றும் முதல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பது, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான தேவையைப் பயன்படுத்த டிவிஎஸ் மோட்டார் போன்ற உள்நாட்டு பிராண்டுகள் கொண்டிருக்கும் நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. நோர்டன் பைக்குகள் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்கான பல முக்கிய உதிரிபாகங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








