ஷோரூமை தேடி இனி சென்னைக்கு போகனும்னு அவசியம் இல்ல! இந்த ஊரில் புதுசா திறப்பாங்கனு எதிர்பார்க்கவே இல்ல!
அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), இந்தியாவில் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய சூப்பர்பைக்கை உருவாக்கிய முதல் நிறுவனம். எஃப்77 (F77) என்கிற பெயரிலான எலக்ட்ரிக் சூப்பர் பைக் உடன் மார்க்கெட்டில் நுழைந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம், சமீபத்தில் டெசராக்ட் (Tesseract) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஷாக்வேவ் (shockwave) எலக்ட்ரிக் பைக் மூலம் மார்க்கெட்டை அதிர வைத்தது.
ஏற்கனவே, ப்ரீ-புக்கிங் (Pre-booking) துவங்கப்பட்ட இந்த புதிய அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் வாகனங்கள் வருகிற 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் அதிகாரப்பூர்வமாக முழுமையான எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) உடன் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதால், டெசராக்ட் மற்றும் ஷாக்வேவ் வாகனங்களுக்கு அதிகப்படியான ப்ரீ-புக்கிங்குகள் கிடைத்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், அல்ட்ராவொய்லெட் புதியதாக 5 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் (Experience Centres) மூலமாக தனது ஷோரூம் (Showroom) நெட்வொர்க்கை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த ஐந்து அல்ட்ராவொய்லெட் ஷோரூம்களுள் ஒன்று நம் தமிழ்நாட்டில் மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, மதுரையில் மட்டுமின்றி தென் தமிழகத்திலேயே முதல் எக்ஸ்பீரியன்ஸ் செண்டரை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் திறந்துள்ளது.
மதுரை கேகே நகர் (Madurai KK Nagar) பகுதியில் துணை ஆட்சியர் காலனி பகுதியில் மெஜெஸ்டிக் சினிமா திரையரங்கிற்கு எதிரே இந்த அல்ட்ராவொய்லெட் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8:30 மணி வரையில் இந்த ஷோரூம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீதி 4 செண்டர்கள் பெங்களூரு, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா & பெர்ஹாம்பூர் மற்றும் ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்பூரில் திறக்கப்பட்டு உள்ளன. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவொய்லெட் நிறுவனத்திற்கு ஏற்கனவே பெங்களூருவில் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறந்ததே பெங்களூருவில் ஆகும்.
அந்த வகையில், தற்போது பெங்களூருவில் இரண்டாவது எக்ஸ்பீரியன்ஸ் செண்டரை அல்ட்ராவொய்லெட் திறந்துள்ளது. பெங்களூருவில் முதல் அல்ட்ராவொய்லெட் ஷோரூம் இந்திராநகர் (Indira Nagar) பகுதியில் செயல்பட்டுவரும் நிலையில், இரண்டாவது ஷோரூம் யெலஹங்கா (Yelahanka) பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐந்து ஷோரூம்கள் மூலமாக அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் மொத்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் சைதாபேட்டையிலும், கோயம்புத்தூரில் அவினாசி சாலையிலும் அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் செயல்படுகிறது. இதனை தொடர்ந்து, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் தனது எக்ஸ்பீரியன்ஸ் செண்டரை திறக்க அல்ட்ராவொய்லெட் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பெங்களூருவில் மேலும் இரு எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறக்க அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராவொய்லெட் ஆனது இந்தியவில் வேகமாக வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாக, டெசராக்ட் மற்றும் ஷாக்வேவ் வாகனங்களின் அறிமுகத்திற்கு பிறகு அல்ட்ராவொய்லெட் நாடு முழுவதும் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய நிலையை அடைய வேண்டுமென்றால், அதற்கேற்ப ஷோரூம்களையும் பரவலாக அனைத்து இடங்களிலும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications









