மூன்று ஸ்கூட்டர்களின் விற்பனையை ஒரேடியாக நிறுத்திய நிறுவனம்.. இனி வாங்கவே முடியாது!
இந்தியாவில் நாலைந்து ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வந்த முக்கியமான நிறுவனங்களில் இத்தாலிய நிறுவனமான ஏப்ரிலியாவும் (Aprilia) ஒன்று. இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான எரிபொருள் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் கிளாஸியான டிசைனுடன் அல்லது ஃபேமிலி டிசைனுடனான ஸ்கூட்டர் மாடல்களையே தயாரித்து வந்த நிலையில், ஏப்ரிலியா மட்டுமே ஷார்ப்பான ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களை உருவாக்கி வந்தது.
ஆனால், தற்போது சத்தமில்லாமல் சில ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டையாக எந்தவிதமான அறிவிப்புகளையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், தங்களது வலைத்தளப்பக்கத்தில் வாகனங்களின் பட்டியலில் இருந்து அந்த ஸ்கூட்டர் மாடல்களை நீக்கியிருக்கிறது. அவை என்னென்ன ஸ்கூட்டர் மாடல்கள் என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

முன்னதாக SR 125, SR 160, SXR 125 மற்றும் SXR 160 ஆகிய நான்கு ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் ஏப்ரிலியா நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இதில் SR 160 ஸ்கூட்டர் மாடலின் இன்ஜினை கொஞ்சம் மறுவடிவமைப்பு செய்து புதிதாக SR 175 என்ற பெயரில் ஏப்ரிலியா வெளியிட்டது. இத்துடன் ஐந்து ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதில் SXR 125, SR 160 மற்றும் SXR 160 ஆகிய மூன்று ஸ்கூட்டர்களின் விற்பனையை இந்தியாவில் தற்போது நிறுத்தியுள்ளது ஏப்ரிலியா. இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களும் ஏப்ரிலியாவின் வலைத்தளப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களை நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இனி வாங்க முடியாது எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதைய நிலையில் SR 125 மற்றும் SR 175 ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே ஏப்ரிலியா இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த SR 175 தான் இந்தியாவில் அனைவரும் வாங்கும் வகையில் இருக்கும் பெரிய இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
SR 175 ஸ்கூட்டர் மாடலை அனைத்து விதமான ப்ரீமியமான வசதிகளையும் கொண்டதாகவே ஏப்ரிலியா உருவாக்கியிருக்கிறது. TFT டிஸ்பிளே, LED முகப்பு விளக்கு மற்றும் பின்பக்க விளக்கு, கூடுதல் பவரைக் கொடுக்கும் இன்ஜின் என மேம்பட்ட அம்சங்களையே இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. எனவே SR 160-யை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் இந்த SR 175 ஸ்கூட்டரை முயற்சி செய்யலாம்
SXR சீரிஸ் ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை அவை முற்றிலும் வேறு மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சுஸூகி பர்க்மன் ஸ்கூட்டர் போன்ற ஹேண்டில்பார் மற்றும் முன்பக்க ஏப்ரன் வடிவமைப்பை ஏப்ரிலியாவின் SXR ஸ்கூட்டர்கள் கொண்டிருந்தன. இதுவரை வாடிக்கையாளர்களுடன் நாங்கள் கலந்துரையாடிய வரையில் இந்த விதமான வடிவமைப்பு நிறைய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தவில்லை என்றே தெரிகிறது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வழக்கமாக ஹேண்டில் பார் மற்றும் முன்பக்க ஏப்ரன் சேர்ந்திருக்கும் வழக்கமான வடிவமைப்பையே விரும்புகிறார்கள். எனவே குறைவான வரவேற்பு காரணமாக SXR சீரிஸின் இரண்டு ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையையும் ஏப்ரிலியா நிறுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. SR 125 ஸ்கூட்டரை 1.15 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், SR 175 ஸ்கூட்டரை 1.22 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் ஏப்ரிலியா விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்ல ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் மாடல் வேண்டும் என்பவர்களுக்கு SR 125 மற்றும் SR 175 நல்ல தேர்வாகவே இருக்கும். SXR சீரிஸ் ஸ்கூட்டர்களின் டிசைன் நிறைய வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்காமல் இருந்தாலும், அதனை விரும்பும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏப்ரிலியாவின் இந்த முடிவு கொஞ்சம் ஏமாற்றம் தான்.


Click it and Unblock the Notifications