பஜாஜ் ஆட்டோவின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது அறிமுகம்? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் வலுவான இடத்தை பிடித்துள்ள பஜாஜ் ஆட்டோ, அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையிலும் விரைவில் களமிறங்க உள்ளது. நடப்பு நிதி ஆண்டு காலத்தில் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் முடிவுகள் கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தினேஷ் தப்பார்," புதிய எலெக்ட்ரிக் பைக்கின் தயாரிப்புப் பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. அதன்படி, இந்த பைக்கை நடப்பு நிதி ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யவும், அதன்பின்னர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

(Representative Image)
முதலில் வெளிநாடுகளுக்கு...
இந்த முடிவுக்கு பின்னால் முக்கிய காரணமும் உள்ளது. பல ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் பஜாஜ் நிறுவனத்திற்கு வலுவான விற்பனை வலையமைப்பு உள்ளது. அந்த சந்தைகளில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், முதலில் அங்கு புதிய மாடலை அறிமுகப்படுத்தி சந்தை வரவேற்பை மதிப்பீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையிலும் பஜாஜ் தனது கவனத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது. குறிப்பாக சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக அதன் உற்பத்தி திறனையும் நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு சந்தையில் தனது விற்பனையை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு
புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் எந்த பெயரில் அறிமுகமாகும் என்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது பல்சர் (Pulsar) பிராண்டின் கீழ் வருமா அல்லது முற்றிலும் புதிய பெயரில் அறிமுகமாகுமா? என்பது அறிமுகத்தின் போதுதான் உறுதியாக தெரியவரும். அதேபோல், பேட்டரி திறன், ரேஞ்ச், செயல்திறன், விலை உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், மிகவும் பாரம்பரியம் மிக்க இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தரத்திற்கு முக்கியத்துவம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதை வெறும் நகரப் பயணங்களுக்கான எலெக்ட்ரிக் பைக்காக மட்டுமல்லாமல், சர்வதேச சந்தைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கி வருகிறது. இதனால், தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு அணுகுமுறையை பார்க்கும்போது, தினசரி பயன்பாட்டுடன் நீண்ட கால வாகன உரிமை அனுபவத்தையும் சிறப்பானதாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
யாருக்கு இந்த அறிவிப்பு முக்கியமானது?
எதிர்காலத்தில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், தற்போது பெட்ரோல் மோட்டார்சைக்கிளில் இருந்து எலக்ட்ரிக்கிற்கு மாற யோசித்து வருபவர்கள் மற்றும் பஜாஜின் அடுத்த தலைமுறை தயாரிப்புகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் இந்த அறிவிப்பை கவனிக்கலாம். குறிப்பாக பல்சர் வரிசையில் எலக்ட்ரிக் மாடல் வருமா என்று காத்திருப்பவர்களுக்கும் இந்த தகவல் முக்கியமானதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்திய பிறகே எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் களமிறங்கும் முடிவை பஜாஜ் எடுத்துள்ளது. இந்தியாவில் உடனடியாக அறிமுகப்படுத்தாமல் முதலில் ஏற்றுமதி சந்தைகளை தேர்வு செய்திருப்பது நிறுவனத்தின் நீண்டகால உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2028ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும், எந்த பிராண்டில் அறிமுகமாகும், என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பதற்கான பதில்கள் விரைவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications