இந்தியாவை அலறவிடப் போகும் புதிய பைக்.. இனிமே இந்த பைக்க தான் எல்லாரும் வாங்கப் போறாங்க!
இந்தியாவில் புதிய அட்வென்சர் பைக்கின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது பிஎம்டபிள்யூ (BMW). இந்தியாவில் புதிதாக அந்நிறுவனம் உருவாக்கி வந்த F 450 GS பைக்கை வெளியிடலாம் என முன்பே தகவல்கள் வெளியாகி வந்தது. சர்வதேச அரங்கில் ஏற்கனவே இந்த பைக் அறிமுகமாகியிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகமாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூவின் சமூக வலைத்தளப் பதிவுகளின்படி வரும் ஏப்ரல் 23ம் தேதியன்று புதிய F 450 GS அட்வென்சர் பைக் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. இந்த பைக் மாடலே இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் தொடக்கநிலை அட்வென்சர் பைக்காகவும் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனமே பிஎம்டபிள்யூவிற்காக இந்த பைக்கை தயாரிக்கவுள்ளது.

கடந்த ஆண்டு வரை இந்தியாவில் மூன்று 310 சிசி பைக்குகளை விற்பனை செய்து வந்தது BMW. G 310 R, G 310 RR மற்றும் G 310 GS ஆகிய மூன்று பைக்குகள் பிஎம்டபிள்யூவின் தொடக்கநிலை பைக்குகளாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதில் 310 R ரோட்ஸ்டர் வகையைச் சேர்ந்ததாகவும், 310 RR ஸ்போர்ட்டியான பைக்காகவும், 310 GS அட்வென்சர் வகையைச் சேர்ந்ததாகவும் இருந்தது.
இதில் ரோட்ஸ்டர் மற்றும் அட்வெனசர் வகை பைக் மாடல்களின் விற்பனையைக் கடந்தாண்டு நிறுத்தியது அந்நிறுவனம். ஸ்போர்ட்டியான முழுமையான ஃபேரிங் கொண்ட G 310 RR பைக் மட்டுமே தற்போது தொடக்கநிலை பிஎம்டபிள்யூ பைக்காக இந்தியாவில் விற்பனையில் இருக்கிறது. விற்பனை நிறுத்தப்பட்ட அட்வென்சர் பைக்கிற்கு மாற்றாகவே புதிய F 450 GS பைக் மாடலை வெளியிடவிருக்கிறது பிஎம்டபிள்யூ.

இந்தப் புதிய அட்வென்சர் பைக்கிற்காக முற்றிலும் புதிய 450 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜினை உருவாக்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த பேரலல் ட்வின் இன்ஜினானது, 48 hp பவர் மற்றும் 43 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொடுத்துள்ளது பிஎம்டபிள்யூ. இந்த கியர்பாக்ஸுடன் ERC (Easy Ride Clutch) அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஈஸி ரைடு கிளட்ச் அம்சத்துடன் மேனுவலாக நாமே கிளட்சை இயக்கலாம் அல்லது ஆட்டோமேட்டிக்காக பைக்கே கிளட்ச் செயல்பாடுகளை பார்த்துக் கொள்ளட்டும் எனவும் விட்டுவிடலாம். கியர் ஷிப்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்த அம்சத்தை புதிய பைக்கில் கொடுத்துள்ளது பிஎம்டபிள்யூ. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அது தொடர்பான ஏதாவது ஒரு அம்சத்தை புதிய பைக்கில் பிஎம்டபிள்யூ கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் ERC வசதியைக் கொடுத்திருக்கிறது.
இது சர்வதேச மாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய மாடலில் இருக்குமா என்பதை ஏப்ரல் 23ல் தான் நாம் தெரிந்த கொள்ள முடியும். இதுதவிர இந்த அட்வென்சக் பைக்கில், டைனமிக் ட்ராக்ஷன் கண்ட்ரோல்,
டைனமிக் பிரேக் கண்ட்ரோல், ஏபிஎஸ் ப்ரோ மற்றும் இன்ஜின் ட்ராக் டார்க் கண்ட்ரோல் ஆகிய மேம்பட்ட எலெக்ட்ரானிக் வசதிகளும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தெந்த அம்சங்கள் இந்திய மாடலுக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
6.5 இன்ச் TFT டிஸ்பிளேவைக் கொண்டிருக்கவிருக்கும் இந்த பைக்கை, கேடிஎம் 390 அட்வென்சர், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றம் ஹோண்டா NX500 ஆகிய பிற அட்வென்சர் பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யவுள்ளது பிஎம்டபிள்யூ. G 310 GS சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அட்வென்சர் பைக் மாடலை ரூ.3.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. புதிய 450 GS ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்கை ரூ.4 லட்சத்திற்கும் மேலான எக்ஸ்-ஷோரூம் விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிடில் வெயிட் அட்வென்சர் பைக் பிரிவிற்கு இந்த F 450 GS ஒரு நல்வரவு. பெர்ஃபாமன்ஸ் மற்றும் ட்வின் சிலிண்டர் இன்ஜினை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும். எனினும் என்ன விலையில் இந்த பைக்கை பிஎம்டபிள்யூ வெளியிடும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட அட்வென்சர் பைக் மாடல்களே ரூ.3.50 லட்சத்தை ஒட்டிய எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, புதிய பிஎம்டபிள்யூ பைக்கானது ரூ.5 லட்சத்தை ஒட்டிய விலையில் வெளியாவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் குறைவான விலையில் வெளியாகும் பட்சத்தில் நிறைய வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பைக்கில் பிஎம்டபிள்யூ கொடுக்கும் மேம்பட்ட எலெக்ட்ரானிக் அம்சங்களையும் நாம் மறக்க முடியாது. பிஎம்டபிள்யூ என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








