இன்னும் 1.5 மாதம் மட்டுமே டைம் இருக்கு... இப்போது விட்டால் அப்புறம் பைக்கிற்கு ரொம்ப செலவு பண்ணனும்!
டுகாட்டி இந்தியா (Ducati India) நிறுவனம் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் அதன் பைக்குகளின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் டுகாட்டி பைக்குகளின் விலைகள் எந்த அளவிற்கு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும், எதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
உலகளவில் விலையுயர்ந்த பைக்குகளை விற்பனை செய்வதில் பிரபலமாக உள்ள நிறுவனங்களுள் ஒன்று, டுகாட்டி ஆகும். இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த பைக் நிறுவனம் இந்தியாவிலும் பல்வேறு விதமான மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நாட்டின் அனைத்து முக்கியமான நகரங்களிலும் டுகாட்டிக்கு டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms) உள்ளன.

இருப்பினும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பைக்குகளின் விலைகளை டுகாட்டி அவ்வப்போது உயர்த்தி விடுகிறது. அந்த வகையில், வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அதன் பைக்குகளின் விலைகளை மீண்டும் அதிகரிக்க டுகாட்டி தயாராகி வருகிறது. வழக்கம்போல், இந்த விலை உயர்வுக்கும் பைக்குகளை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும், பணம் மதிப்பு இழப்பையும் டுகாட்டி காரணமாக சுட்டிக் காட்டியுள்ளது.
குறிப்பாக, பணம் மதிப்பிழப்பால் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்யும் பைக்குகளுக்கான சரியான விலையை நிர்ணயிப்பதில் டுகாட்டி நிறுவனம் பெரிதும் தடுமாற்றத்தை கண்டு வருகிறது. இந்த விலை திருத்தம் ஆனது குறிப்பிட்ட டுகாட்டி பைக் மாடல்களில் மட்டுமே கொண்டுவரப்பட உள்ளதாக டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்த்ரா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தியாவில் எந்தெந்த டுகாட்டி பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல், இந்த விலை அதிகரிப்பானது எந்த அளவிற்கு இருக்கும் என்கிற விபரத்தையும் டுகாட்டி நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில் 1.5%-இல் இருந்து 3% வரையில் இருக்கலாம்.
இவ்வாறு பைக்குகளின் விலைகளை அதிகரித்த போதிலும், இந்தியாவில் புது, புது பைக்குகளை டுகாட்டி தொடர்ந்து அறிமுகம் செய்ய உள்ளது. மிக சமீபத்தில் டெஸ்மோ 450 எம்.எக்ஸ் (Desmo 450 MX) மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த டுகாட்டி அடுத்ததாக இந்த ஏப்ரல் மாதத்திற்குள் பனிகளே வி4 லம்போர்கினி (Panigale V4 Lamborghini) என்கிற பைக்கை இந்திய மார்க்கெட்டில் களமிறக்க உள்ளது.
இந்த பனிகளே வி4 லம்போர்கினி பைக் ஆனது பிரபல இத்தாலிய ஸ்போர்ட்ஸ் பைக் நிறுவனமான லம்போர்கினி உடன் இணைந்து டுகாட்டி உருவாக்கி இருப்பது ஆகும். இது மட்டுமின்றி, டுகாட்டி மான்ஸ்டர் வி2 (Monster V2), ஹைப்பர்மோட்டார்ட் வி2 (Hypermotard V2) மற்றும் டெசர்ட் எக்ஸ் வி2 (DesertX V2) உள்ளிட்ட புதிய மோட்டார்சைக்கிள்களையும் வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.
இவ்வாறான புதிய பைக்குகளின் அறிமுகத்துடன், அதற்கேற்ப அவற்றை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களையும் புதியதாக பல பகுதிகளில் திறக்க டுகாட்டி திட்டமிட்டுள்ளது. இதன்படி, கோவா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் டுகாட்டியின் புதிய சர்வீஸ் செண்டர்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளை விற்பனை செய்வதில் முதன்மையான நிறுவனமாக விளங்கும் டுகாட்டியின் புதிய விலை அதிகரிப்பானது இந்த நிறுவனத்தின் பைக்குகளை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கலாம். ஜூன் 1ஆம் தேதியில் இருந்துதான் இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்பட உள்ளதால், டுகாட்டி பைக்கை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் அதற்கு முன்னதாகவே பைக்கை வாங்கிவிடுவது நல்லது.


Click it and Unblock the Notifications








