மாசு அளவு அதிகரித்தால் பைக்கின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம்... மத்திய அரசு பரிசீலனை!!
இந்தியாவில் வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு அளவைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், எதிர்காலத்தில் பெட்ரோல் இருசக்கர வாகனங்களில் மாசு அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டினால், வாகனத்தின் வேகத்தை தானாகவே குறைக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), ICAT அமைப்பு மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் இணைந்து இதற்கான நடைமுறை குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக பேசப்படும் அம்சம் 'லிம்ப்-ஹோம் மோட்' (Limp-Home Mode) என்ற தொழில்நுட்ப வசதியை இருசக்கர வாகனங்களில் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, இருசக்கர வாகனத்தின் கார்பன் மோனாக்ஸைடு அல்லது நைட்ரஜன் ஆக்ஸைடு நச்சுப் புகை அளவு அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டுவதாக அதன் ஆன்-போர்டு டயக்னாஸ்டிக் (OBD) அமைப்பு கண்டறிந்தால், வாகனத்தின் வேகம் அல்லது எஞ்சின் பவர் குறைக்கப்படும். இதன்மூலமாக வாகனத்தை தொடர்ந்து சாதாரணமாக பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், அருகிலுள்ள சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லும் அளவுக்கு கட்டாயத்தை ஏற்படுத்தும்.
பிரச்னை சரிசெய்யப்படும் வரை வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் தடுப்பது அல்லது Force To Service என்ற அம்சத்துடன் சர்வீஸ் சென்டருக்கு சென்று சரி செய்வதற்கான கட்டாயத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட வழிகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவை எதுவும் இதுவரை உறுதியாகவில்லை.
பிஎஸ்6 விதிமுறைகளில் வாகனங்களின் மாசு வெளியீட்டை கண்காணிப்பதில் ஓபிடி அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2025 ஏப்ரல் 1 முதல் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு OBD Stage II-B அமைப்பு மூலமாக கடுமையான கண்காணிப்பு அமலுக்கு வந்துள்ளன. இந்த திட்டம் குறித்து அரசு மற்றும் தொழில்துறையினர் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இதற்கான செயல்படுத்தும் திட்டத்தை உருவாக்க வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (SIAM) மற்றும் ICAT அமைப்புக்கு அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்தும் நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், சென்சார் பிரச்னைகள், தரமற்ற எரிபொருள் போன்றவற்ற சில காரணங்களால் நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மிகுந்த சாலைகள் மற்றும் ஜன நடமாட்டம் குறைவான பகுதிகளில் செல்லும்போது இவ்வாறு வாகனம் திடீரென வேகம் குறைந்தால் அது ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.
எனவே, இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் எந்த வகையான வாகனங்களுக்கு பொருந்தும், எந்த அளவிலான மாசு அதிகரிப்பு ஏற்பட்டால் லிம்ப்-ஹோம் மோட் செயல்படும், வாகனத்தை மீண்டும் இயல்பான நிலையில் இயக்குவதற்கான நடைமுறை என்ன என்பது போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. எனினும், இது மாசு உமிழ்வு பிரச்னையை குறைப்பதற்கு உதவும் என்று மத்திய அரசு கருதுகிறது.


Click it and Unblock the Notifications

