பருத்தி விற்பனையில் துவங்கிய பிஸ்னஸ், இன்று எலெக்ட்ரிக் 2-வீலர்களில்... கோடிகளில் கிடைக்கும் வருவாய்!
க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (GEML) நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.786 கோடி வருவாயை ஈட்டி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் எவ்வளவு அதிகம் என்பதையும், க்ரீவ்ஸ் நிறுவனத்தில் இருந்து என்னென்ன எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 165 வருடங்களுக்கு முன் முதன்முதலில் பருத்தி விற்பனையை துவங்கிய க்ரீவ்ஸ் காட்டன் தற்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உள்ளது. அந்த வகையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் விரிவடைந்து வருவதால் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்கிற நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்த க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் ஆம்பியர், க்ரீவ்ஸ் ELTRA, ELE என்கிற மூன்று பிராண்ட்கள் தற்சமயம் செயல்படுகின்றன. இதில், ஆம்பியர் ஆனது 2018ஆம் ஆண்டு வரையில் ஒரு தனி நிறுவனமாக செயல்பட்டுவந்தது. அதன் பங்குகளை வாங்கி அதன் உரிமையாளராக க்ரீவ்ஸ் காட்டன் மாறியது. அதன்பின் அது, க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
மேலே கூறப்பட்ட ரூ.786 கோடி வருவாய் ஆனது இந்த மூன்று பிராண்ட்களின் மூலமாக கடந்த ஒரு வருடத்தில் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஈட்டியது ஆகும். கடந்த காலங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சந்தை விரிவாக்கம், புதிய தயாரிப்புகளின் அறிமுகம் மற்றும் பரந்த சில்லறை விற்பனை மையங்களினால் இத்தனை கோடி ரூபாய் வருவாய் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கு கிடைத்துள்ளது.

அரசாங்கத்தின் VAHAN தளத்தின்படி, கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலத்தில் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஆனது அதற்கு முந்தைய இதே ஒரு வருட காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 51% அதிகமாகும்.
அதாவது, பாதிக்கும் மேல் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து எலெக்ட்ரிக் 2-வீலர்கள் தற்போதைக்கு ஆம்பியர் பிராண்டில் இருந்து மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அதுவும், தற்போதைக்கு ஆம்பியரில் இருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆதலால், ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 51% அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
க்ரீவ்ஸ் ELTRA மற்றும் ELE பிராண்ட்களில் இருந்து எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 51% அதிகரித்து இருப்பது மட்டுமின்றி, இந்தியாவில் மேற்கூறப்பட்ட ஓர் ஆண்டு காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் ஆம்பியரின் பங்களிப்பும் 3.6%-இல் இருந்து 4.4% ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் முதல் ஆறு நிறுவனங்களுள் ஒன்றாகவும் ஆம்பியர் உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு, ஒடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் தனது சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காட்டன் விற்பனையில் துவங்கிய க்ரீவ்ஸ் நிறுவனத்தின் பயணம் இன்றைய கால எலெக்ட்ரிக் 2-வீலர்கள் & 3-வீலர்கள் விற்பனையிலும் இருப்பது மட்டுமில்லாமல் அதன் மூலமாக சுமார் ரூ.786 கோடி வருவாயை ஈட்டி இருப்பது எல்லாம் பெரிய விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வருவாயில் கணிசமான தொகை இந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்திற்கு இலாபமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications