எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் முந்திக் கொள்ள ஹீரோ முடிவு... புதிய மாடலை விரைவில் களமிறக்குகிறது!!
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் நேரடியாக களமிறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வரும் 2027ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பாரம்பரிய இருசக்கர வாகன நிறுவனங்களில் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருந்தாலும், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் பெரிய அளவில் தயாரிப்புகள் இல்லை. இந்த சூழலில் ஹீரோ மோட்டோகார்ப் தனது பிரபலமான மோட்டார்சைக்கிள் அனுபவத்தையும், மிகப்பெரிய விற்பனை நெட்வொர்க்கையும் பயன்படுத்தி இந்த பிரிவில் நுழைய உள்ளது.

புதிய எலக்ட்ரிக் பைக்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஹர்ஷவர்தன் சித்தாலே கூறுகையில்,"வரும் 2027ம் ஆண்டுக்கு முன்பாகவே பல்வேறு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை சந்தையில் கொண்டுவரும் பணிகள் திட்டமிட்டப்படி முன்னேற்றம் இருக்கிறது. குறிப்பாக, டெல்லியில் 2028 ஏப்ரல் முதல் புதிய ICE இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வரிசையை தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
இது வெறும் எதிர்காலத் திட்டம் மட்டுமல்ல. கடந்த ஆண்டு ஐக்மா 2025 சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது அங்கமாக செயல்படும் VIDA பிராண்டின் கீழ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தியது. அதே நேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து புராஜெக்ட் VxZ என்ற எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் உருவாக்கி வருவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
எதிர்கால வரிசை
ஹீரோவின் எதிர்கால EV திட்டம் ஒரே வகை பைக்குடன் நிறுத்தப்படாது என்பதற்கான தகவல்களும் வெளியாகியுள்ளன. அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்கள் முதல் அதிக செயல்திறன் கொண்ட பிரீமியம் எலக்ட்ரிக் பைக்குகள் வரை பல்வேறு பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இதன் மூலம் ஸ்பிளென்டர், பேஷன் போன்ற மாடல்களால் உருவாக்கப்பட்டுள்ள ஹீரோவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தை எதிர்காலத்தில் எலக்ட்ரிக் பிரிவுக்கும் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
விடா வளர்ச்சி
ஹீரோ மோட்டோகார்ப் முற்றிலும் புதியதாக EV சந்தைக்குள் வரவில்லை. அதன் விடா பிராண்டின் கீழ் ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2026 நிதி ஆண்டில் விடா பிராண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,51,748 யூனிட்டுகள் சில்லறை விற்பனை செய்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் விடாவின் சந்தைப் பங்கும் கடந்த ஆண்டு மார்ச்சில் 6.1% ஆக இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் 11.2% ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஸ்கூட்டர் பிரிவில் பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையிலும் வலுவாக கால்பதிக்க ஹீரோவுக்கு நல்ல அடித்தளம் உருவாகியுள்ளது.
பஜாஜுக்கு போட்டி அதிகரிக்கும்
எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோவின் வருகை பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பாரம்பரிய நிறுவனங்களுக்கும் முக்கியமான போட்டியை உருவாக்கும். பஜாஜ் ஏற்கனவே சேத்தக் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் வலுவாக செயல்பட்டு வரும் நிலையில், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவிலும் 2027-28 நிதியாண்டில் தயாரிப்புகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, அடுத்த சில ஆண்டுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தாண்டி மின்சார மோட்டார்சைக்கிள் சந்தையிலும் போட்டி சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. ஹீரோவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் அடித்தளம், உற்பத்தித் திறன் மற்றும் விற்பனை நெட்வொர்க்குடன் புதிய எலக்ட்ரிக் பைக்குகள் களமிறங்கும்போது, இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் அது முக்கியமான திருப்பமாக அமையலாம்.


Click it and Unblock the Notifications