ஹீரோ- ஹோண்டா போட்டியில் ஜெயிக்க போவது யார்? ஒரே வருடத்தில் 12+ புதிய வாகனங்களை களமிறக்கும் ஹீரோ!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த 1 வருடத்திற்கு உள்ளாக 12 புதிய தயாரிப்புகளை சந்தையில் களமிறக்க உள்ளதாக ஹீரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் CEO ஹர்ஷவர்தன் சிதலே சமீபத்தில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஹீரோ நிறுவனத்தை பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்துள்ள CEO ஹர்ஷவர்தன் சிதலே, 2027 மார்ச் மாதத்திற்கு உள்ளாக 12 புதிய தயாரிப்பு வாகனங்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால், 12க்கும் அதிகமான தயாரிப்புகளின் அறிமுகத்தை ஹீரோ மோட்டோகார்ப் எதிர்பார்ப்பதாகவும் இந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். இது இல்லாமல், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹீரோ 2-வீலர்களும் அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவற்றை எல்லாம் சேர்த்தால், அடுத்த ஒரு வருடத்தில் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து 40- 50 வாகனங்கள் புதியதாக அறிமுகம் செய்யப்படலாம் என்றும் ஹர்ஷவர்தன் சிதலே பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ஹீரோவின் பெட்ரோல் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் என இரண்டிற்கும் நல்லப்படியான வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனையில் நல்லப்படியான வளர்ச்சியை காண்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவரது கூற்றின்படி பார்க்கும்போது, ஹீரோ ஸூம் மற்றும் டெஸ்டினி ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ளது.

ஸூம் ஸ்கூட்டர்களின் உற்பத்தி டபுள் மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள CEO ஹர்ஷவர்தன் சிதலே, டெஸ்டினி ஸ்கூட்டர்களின் உற்பத்தி 50% அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், 2030ஆம் ஆண்டிற்குள் ஹீரோவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் 50% எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
இதன் ஒரு பகுதியாக, தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி இந்த மே மாத இறுதியில் இருந்து 50% ஆகவும், நடப்பு 2026ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து டபுள் மடங்கு அதிகமாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என இரண்டின் உற்பத்தியையும் அடுத்த ஒரு வருடத்தில் டபுள் மடங்கு அதிகரிப்பதற்காக சுமார் ரூ.1,500 கோடியை ஹீரோ மோட்டோகார்ப் முதலீடு செய்கிறது.
ஸ்கூட்டர்களுடன் சேர்த்து, விற்பனை செய்யப்படும் பைக்குகளின் எண்ணிக்கையையும் ஹீரோ நிறுவனம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து மக்களும் வாங்கக்கூடிய குறைவான விலையில், புதிய 125சிசி பைக்குகளை அறிமுகம் செய்ய ஹீரோ விரும்புவது இந்த நிறுவனத்தின் CEO ஹர்ஷவர்தன் சிதலேவின் தற்போதைய பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ள விபரங்களின்படி, 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 54,93,178 மோட்டார்சைக்கிள்களையும், 5,72,870 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளது. அதுவே, ஹீரோவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள ஹோண்டா நிறுவனம் 25,89,985 மோட்டார்சைக்கிள்களையும், 31,62,067 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: SIAM-இன் டேடாவின்படி பார்க்கும்போது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 90% சதவீதத்திற்கும் மேல் பைக்குகளை தான் விற்பனை செய்கிறது. இருப்பினும், ஒரு வருடத்தில் சில இலட்சங்கள் மட்டுமே விற்பனையாகும் ஹீரோ ஸ்கூட்டர்களின் மீதே நிறுவனத்தின் கவனம் உள்ளதை CEO ஹர்ஷவர்தன் சிதலேவின் பேட்டியின் மூலம் அறிய முடிகிறது. ஆதலால், அடுத்த ஒரு வருடத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் 12+ புதிய ஹீரோ தயாரிப்புகளில் அதிகமாக ஸ்கூட்டர்கள் இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications