ஹீரோவோட இந்த ஸ்கூட்டரை தான் மக்கள் இப்போ போட்டி போட்டு வாங்குறாங்க.. ஏன் தெரியுமா?
பைக்குகள் என்று வரும் போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைத் தவிர்த்து விட்டு நம்மால் பேச முடியாது. இன்று இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஹீரோவினுடையது தான். பத்தாண்டுகளுக்கும் மேலாக முதலிடத்தில் அசைக்க முடியாத விற்பனை அளவைக் கொண்டு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்.
ஆனால் ஸ்கூட்டர்கள் என்று வரும் ஹீரோ கிட்டத்தட்ட காணாமல் போய்விடுகிறது. ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுஸூகி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை மிக மிகக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மாறி வருகிறது. ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை தாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப்.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் 17,978 ஸ்கூட்டர்களையே ஹீரோ விற்பனை செய்திருக்கிறது. இதில் எரிபொருள் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இரண்டுமே அடங்கும். அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்து ஏப்ரல் 2026-க்கு வருவோம். ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை கடந்த 2026 ஏப்ரலில் 231% உயர்ந்து 59,515 யூனிட்டுகளாக இருக்கிறது. 2025 ஏப்ரலுடன் ஒப்பிடும் போது இது சுமார் 41,537 யூனிட்டுகள் அதிக அளவாகும்.
இதில் விடா பிராண்டின் கீழ் ஹீரே விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் எடுத்துக் கொண்டால், அதன் விற்பனை 129% அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7,787 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் விற்பனை செய்திருந்த ஹீரோ, இந்த ஏப்ரலில் இருமடங்கிற்கும் மேல் அதிகமாக 16,291 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இதனை விட ஸ்கூட்டர்கள் பிரிவில் ஹீரோவிற்கு இன்னொரு சிறப்பான விஷயமும் நடந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனையில் ஹீரோவின் சந்தைப் பங்கு 3.27 சதவீதம் மட்டுமே. அது இந்த ஏப்ரலில் 8.60 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை வளர்ச்சி புதிய உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, அதெல்லாம் இருக்கட்டும் கடந்த சில ஆண்டுகளில் ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை இவ்வளவு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் எது தெரியுமா? அதன் புதிய டெஸ்டினி ஸ்கூட்டர் தான். இப்போது ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்களிடம் நிறைய ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. ஆனால் அதில் அதிகம் விற்பனையாகும் மாடல் என்றால், அது ஒன்று தான்.
ஹோண்டாவிற்கு ஆக்டிவா, டிவிஎஸ்ஸுக்கு ஜூப்பிட்டர் மற்றும் சுஸூகிக்கு அக்செஸ். அதே ஃபார்முலாவைப் பின்பற்றி பார்த்தவுடன் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும் வகையில் டெஸ்டினி ஸ்கூட்டரை ஹீரோ அப்டேட் செய்தது. அது தற்போது அந்நிறுவனத்திற்குப் பலன் கொடுத்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விற்பனை 6,000 யூனிட்டுகள் என்ற அளவை ஒட்டியே இருந்த வந்தது. அப்டேட்டிற்குப் பிறகு அது பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரானது இப்போது ஒவ்வொரு மாதமும் 25,000 யூனிட்டுகளுக்கும் மேலாக விற்பனையாகி வருகிறது. 125 சிசி மட்டுமல்லாது, 110 சிசி இன்ஜினுடனும் டெஸ்டினி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹீரோ. முன்னர் டாப் 10 ஸ்கூட்டர்களில் இல்லாமல் இருந்து வந்த டெஸ்டினி, இப்போது அந்தப் பட்டியலில் தவறாமல் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல இனி வரும் நாட்களில் ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை பயணம் மென்மேலும் உயரவே போகிறது. அதற்கு முக்கியக் காரணமாக விடா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், டெஸ்டினி ஸ்கூட்டர் மாடல்களும் இருக்கும். இப்போது ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுஸூகிக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications