பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சிக்குதான் ஸ்கெட்ச்னு பாத்தா ராயல் என்பீல்டும் தப்பிக்கல! மிரட்டும் ஹீரோ நிறுவனம்
நடப்பு 2026-27ம் நிதியாண்டில் இந்தியாவின் 150-350 சிசி பிரீமியம் செக்மெண்ட்டில் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) பிராண்டுகளின் கீழ் இந்த புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
ஹார்லி டேவிட்சன் பிராண்டா? என ஒரு சிலர் நினைப்பது புரிகிறது. அது ஏன்? என்பது தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் ஆகிய 2 நிறுவனங்களும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியா மற்றும் ஒரு சில சர்வதேச சந்தைகளில் பைக்குகளை இணைந்து உருவாக்குவதற்காகவும், விற்பனை செய்வதற்காகவும் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 (Harley Davidson X440) பைக்தான் இந்த 2 நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய முதல் பைக் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தியாவின் 150-350 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட் தற்போது வெகுவாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த செக்மெண்ட்டில் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி (GST) காரணமாக இந்தியாவில் 350 சிசிக்கும் மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் விற்பனை மந்தமாக உள்ளது. புரியும்படி சொல்வதென்றால் 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கு ஜிஎஸ்டி வரி அதிகம். இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து வெறும் 18 சதவீதமாக குறைந்தது. இந்த வரி குறைப்பின் காரணமாகவே இந்தியாவில் தற்போது 150-350 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட் வெகுவாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதே நேரத்தில் 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான வரி அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான வரி 31 சதவீதமாக இருந்தது. இதில், 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி ஆகும். எஞ்சிய 3 சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு பிறகு இந்த வரி ஒட்டுமொத்தமாக 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு விட்டது.
இதன் காரணமாக 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. வரி அதிகம் என்பதால், விலையும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக விற்பனை சிறப்பாக இருக்காது என்பதுதான் இதற்கு காரணம்.
இதே காரணத்தால்தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதை விட, 150-350 சிசி பிரீமியம் செக்மெண்ட்டில் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் 150 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட்டில் பல்வேறு நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பஜாஜ் நிறுவனம் பல்சர் (Bajaj Pulsar) மூலமும், டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி (TVS Apache) மூலமும் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன.
இந்த சூழலில் வரவுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு பஜாஜ் பல்சர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி போன்ற பைக்குகளுக்கு எல்லாம் சவாலாக இருக்கும். 150 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட்டில் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட, 350 சிசி செக்மெண்ட்டின் தனிக்காட்டு ராஜாவாக ராயல் என்பீல்டு (Royal Enfield) உள்ளது.
ஹோண்டா (Honda), ஜாவா (Jawa) மற்றும் ட்ரையம்ப் (Triumph) போன்ற நிறுவனங்கள் முட்டி மோதியும் கூட, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி கோட்டையில் ஒரு சிறு துரும்பை கூட அசைக்க முடியவில்லை. இந்த சூழலில்தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது 350 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட்டிலும் புதிய தயாரிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப்-ராயல் என்பீல்டு இடையேயான போட்டி எப்படி இருக்க போகிறது? என்பதை காண உங்களை போலவே நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.


Click it and Unblock the Notifications