பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலா? நாடே எதிர்பார்க்க, மத்திய அமைச்சர் முன்னிலையில் அறிமுகமாகும் முதல் பைக்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெட்ரோல் இல்லாமல் எத்தனாலில் இயங்கக்கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிளை வருகிற ஜூன் 3ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் முன்னிலையில் நடைபெறவுள்ள அறிமுக நிகழ்ச்சியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் இந்த புதிய ஹீரோ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக மாற்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தது எல்லாம் அதன் ஒரு பகுதியே ஆகும். இந்த வகையில், CNG, ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய வாகனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக, எத்தனால் விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. தற்சமயம் நாடு முழுவதும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த அளவை 30% ஆக அதிகரிக்க மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், முழுவதுமாக எத்தனாலில் மட்டுமே இயங்கக்கூடிய வாகனங்களும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் மூலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த விஷயத்தில் வருகிற ஜூன் மாதம் ஆனது முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்தியாவின் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் ஜூன் 5ஆம் தேதியில் தனது முதல் எத்தனால் காரை அறிமுகம் செய்ய உள்ளது. ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த கார் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொள்ளவுள்ளார்.

அதேபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 இலட்சம் இருசக்கர வாகனங்களை அசால்ட்டாக விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது முதல் எத்தனால் பைக்கை வருகிற ஜூன் 3ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியிலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொள்ளவுள்ளார்.
மேலும், தலைநகர் புது டெல்லியில் நடைபெறவுள்ள இந்த அறிமுக நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களும் கலந்துக் கொள்வார். 100% எத்தனாலில் இயங்கக்கூடியதாக இருப்பினும், இத்தகைய வாகனங்களை 'ஃபிளக்ஸ்-ஃபியுல் வாகனங்கள்' என அழைக்கின்றனர். இதற்கு காரணம், இந்த வாகனங்கள் தேவைக்கேற்ப எத்தனால் அல்லது பெட்ரோலில் இயங்கக்கூடியவை ஆக உருவாக்கப்படுவதால் ஆகும்.
ஏனெனில், எத்தனாலை பெறுவதற்கான நெட்வொர்க் இன்னும் நாடு முழுவதும் 100% விரிவடையவில்லை. ஆதலால், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக பெட்ரோல் டேங்கும் சிறிய அளவில் இந்த வாகனங்களில் வழங்கப்படும். ஹீரோ நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் எத்தனால் பைக் குறித்த எந்த விபரங்களும் தற்போதைக்கு இல்லை.
அதாவது, எந்த பெயரில் இது வெளிவர உள்ளது? எத்தகைய சிசி என்ஜினை கொண்டதாக இருக்கும் என்பது குறித்த விபரங்கள் இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், பிரபலமான ஹீரோ ஸ்பிளெண்டர் அல்லது எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் பிளாட்ஃபாரத்தை கொண்டதாக இருக்கலாம். கடந்த 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வெர்சனை ஹீரோ நிறுவனம் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: CNG போன்று எத்தனாலும் பெட்ரோலுக்கு மாற்றாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலம் எலெக்ட்ரிக்கை சார்ந்துதான் இருக்கும் என்றாலும், அத்தகைய காலக்கட்டத்தை எட்டும் வரையில் இடையில் இவ்வாறான CNG, எத்தனால் போன்ற மாற்று எரிபொருள் வாகனங்களுக்கான மார்க்கெட் உருவாக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications