வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. புதிய ஸ்ப்ளெண்டர் பைக்கை சில வாரங்களில் இந்தியாவில் வெளியிடுகிறது ஹீரோ!
ஹீரோ நிறுவனமானது கலப்பு எரிபொருளில் (Flex Fuel) இயங்கும் இருசக்கர வாகனத்தை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த பைக்கை எப்போது அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது குறித்த தகவல் கசிந்திருக்கிறது. வரும் ஜூன் 3ம் தேதியன்று கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடிய புதிய பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு ஒரு புரட்சிகரமான மாதமாகக் கூட கூறலாம். கலப்பு எரிபொருள் பைக் மட்டுமின்றி, புதிய கலப்பு எரிபொருள் காரும் இந்த மாதம் தான் வெளியாகவிருக்கிறது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி தான் ஜூன் 5ம் தேதியன்று கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய காரை வெளியிடவிருக்கிறது. ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது ஹீரோவின் கலப்பு எரிபொருள் பைக்கைப் பற்றித் தான்.

சரி ஹீரோவின் பைக் குறித்து மேற்கொண்டு நாம் பார்ப்பதற்கு முன்பாக கலப்பு எரிபொருள் என்றால் என்ன என்பது குறித்து தெளிவாகப் பார்த்துவிடும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 100 சதவீதம் சுத்தமான பெட்ரோல் தான் இந்தியாவில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு தொடங்கியது. 2001ல் சோதனை முறையில் தொடங்கப்பட்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோலில் எத்தனாலின் கலப்பு அதிகரித்தது.
தற்போது 20 சதவீதம் எத்தனாலும், 80% பெட்ரோலும் கலந்த எரிபொருளே பயன்பாட்டில் இருக்கிறது. இந்த எரிபொருளுக்கு ஏற்ற வகையிலேயே தற்போது வாகனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த எரிபொருளைத் தான் E20 ஃப்யூல் அல்லது E20 பெட்ரோல் எனக் குறிப்பிடுகின்றன. வரும் காலத்தில் இந்த எத்தனால் கலப்பு அளவை தொடர்ந்து அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட E25 எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

அடுத்த சில பத்தாண்டுகளில் 100 சதவீதம் எத்தனாலையே எரிபொருளாக நாம் பயன்படுத்தவும் தொடங்கலாம். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் வாகனங்கள் தயாராக வேண்டும் இல்லையா. எனவே தான் அதிகளவு எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளிலும் இயங்கும் வகையில் வாகனங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள். அதிகளவு என்றால் 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த எரிபொருள் அல்லது 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களையே கூட உருவாக்கி வருகின்றன.
இதனைத் தான் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வெஹிக்கிள் (Flex Fuel Vehicle) அழைக்கின்றன. இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வெஹிக்கிளில் இருக்கும் ஒரு நன்மை என்னவென்றால், இது 100 சதவீதம் எத்தனாலிலும் இயங்கும், 100 சதவீதம் பெட்ரேலிலும் இயங்கும். அல்லது இரண்டும் சேர்ந்த சேர்மானத்திலும் இயங்கும். தொடர்ந்து எத்தனாலின் அளவை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில் எதிர்காலத்திற்கும் சேர்த்து இது போன்ற வாகனங்களை வாங்கவே வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள்.
அதன் முதற்கட்டமாகத் தான் வரும் ஜூன் முதல் வாரத்தில் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் கார் மற்றும் பைக்குகள் வெளியாகவிருக்கின்றன. ஹீரோ நிறுவனமானது தங்களது முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்காக ஸ்ப்ளெண்டர் பிளஸ் அல்லது HF டீலக்ஸை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ப்ளெண்டர் பிளஸ் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருவதால் அதனை முதலில் ஹீரோ அப்டேட் செய்யலாம் ஒரு எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கடந்தாண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் HF டீலக்ஸின் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மாதிரி பைக்கையே ஹீரோ காட்சிப்படுத்தியிருந்தது. எனவே அதனையே தங்களது முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்காக ஹீரோ வெளியிடலாம் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் ஜூன் 3ம் தேதியன்று குறைவான விலை கொண்ட முதல் கலப்பு எரிபொருள் பைக்கை இந்தியாவில் நாம் பார்க்கலாம்.
ஆனால் இதில் முன்னோடி ஹோண்டா தான். சில ஆண்டுகளுக்கு முன்பாகவே CB300F கலப்பு எரிபொருள் பைக்கை அந்நிறுவனம் வெளியிட்டது. 85 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளில் இயங்கும் வகையில் இந்த பைக்கை ஹோண்டா வடிவமைத்திருந்தது. ஆனால் குறைவான வரவேற்பு காரணமாக இந்த பைக்கின் விற்பனையை ஹோண்டா நிறுத்திவிட்டது.
ஹீரோ மற்றும் ஹோண்டா மட்டுமல்ல, ராயல் என்ஃபீல்டு, டிவிஎஸ், சுஸூகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் மாற்று எரிபொருள் அல்லது கலப்பு எரிபொருளில் இயங்கும் வகையிலான பைக்குகளை மற்றும் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருகின்றன. ஹீரோ வெளியிடும் இந்த கலப்பு எரிபொருள் பைக்கானது ஒரு தொடக்கதான். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் புதிய ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்குகளின் வெளியீடும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் எரிபொருள் அவசரம் ஏற்பட்டிருக்கிறது. எரிபொருளுக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பது உள்நாட்டில் பொருளாதாரப் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு நாட்டு அரசும் உணர்ந்து வருகின்றன. இதனாலேயே எரிபொருள் பயன்பாட்டில் சுயசார்பை எட்டும் முடிவை எடுத்திருக்கின்றன. இந்தியாவின் எண்ணெய் வளம் மிகவும் குறைவு. ஆனால் எத்தனால் தயாரிப்பில் இந்தியா முன்னேறி வருகிறது.
எனவே தான் எத்தனாலை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்தும் முடிவை மத்திய அரசு எடுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் எரிபொருளில் சுயசார்பை இந்தியா எட்டுவதோடு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஆகும் செலவைக் குறைத்து அதன் மூலம் இந்தியா மீதான பொருளாதார சுமையையும் குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications