ஸ்பிளென்டர், டீலக்ஸ் Flex Fuel பைக்குகளுக்கு குவியும் புக்கிங்: சந்தோஷத்தில் ஹீரோ மோட்டோகார்ப்
இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தனது E85 ஃப்ளெக்ஸ் ஃபியூவல் பைக்குகளுக்கு இதுவரை 10,000 புக்கிங்குகள் கிடைத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஸ்பிளென்டர் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மற்றும் எச்எஃப் டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆகிய இரண்டு மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த இரண்டு பைக்குகளும் E20 முதல் E85 வரையிலான எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் 100cc பிரிவில் அறிமுகமான முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் பைக்குகள் என்பதால் அறிமுகம் செய்தபோதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில், இந்த இரண்டு ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக் மாடல்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவு தலைமை அதிகாரி ஆசுதோஷ் வர்மா கூறுகையில், "அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட எங்களது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பைக்குகளுக்கு 10,000க்கும் அதிகமான விசாரணைகள் வந்துள்ளன. அதேபோன்று, புக்கிங் எண்ணிக்கை 10,000 என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளதாகவும் இடி ஆட்டோ தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் பைக் வர்த்தகத்திற்கு மாற்று
எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சி வேகமெடுத்து வரும் சூழலில், ஃப்ளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பத்தை ஹீரோ மோட்டோகார்ப் வெறும் மாற்று எரிபொருள் முயற்சியாக மட்டும் பார்க்கவில்லை. தனது பெட்ரோல் எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கான எதிர்கால வளர்ச்சியில் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடல்கள் முக்கியமானதாக கருதுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் ஆண்டுதோறும் 45 லட்சம் முதல் 50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அதுவும் ஸ்பிளென்டர் ப்ளஸ் மற்றும் டீலக்ஸ் பைக்குகளும் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக உள்ளன. எனவே, அதன் வர்த்தகத்தை தக்க வைப்பதற்கு, பெட்ரோலுக்கு மாற்றாக இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடல்கள் தேவையாக உள்ளன.
E85 எரிபொருள் சப்ளை
எத்தனால் அளவு பெட்ரோலில் 85 சதவீதம் வரை கலந்து விற்பனை செய்தாலும், இந்த மாடல்கள் சிறப்பாக செயல்படும். ஆனால், தற்போது E20 பெட்ரோல் மட்டுமே பரவலாக கிடைக்கிறது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் E85 பெட்ரோல் அறிமுகம் செய்தாலும் கூட இந்த பைக் மாடல்களின் எஞ்சின் இணக்கமானதாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் கவலையின்றி பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கும்.
ஹீரோவின் தொலைநோக்குத் திட்டம்
2031ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை, பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக வரலாம் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கருதுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் சந்தை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஏற்ப எலெக்ட்ரிக் (E)V, பெட்ரோல் (ICE) மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (Flex Fuel) மாடல்களை சமநிலைப்படுத்தும் திட்டத்தில் நிறுவனம் உள்ளது.
இருக்கும் சவால்கள்
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வெறும் சில மாதங்களிலேயே 10,000 புக்கிங்கை நெருங்கியிருப்பது இந்தியாவில் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் பைக்குகளுக்கு உருவாகி வரும் ஆரம்பகட்ட ஆர்வத்தை காட்டுகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பம் உண்மையான வெற்றியை பெறுவதற்கு E85 எரிபொருள் வினியோகம் பரவலாகவும், சீராகவும் கிடைப்பதற்கு வழி வகை செய்வதும் முக்கியமானதாக இருக்கும்.
Source: ET Auto
This article has been updated with typo correction and source details.


Click it and Unblock the Notifications


