இந்த புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா வெளியிடுவது உறுதி.. யமஹா தான் கதிகலங்கப்போகுது!
இந்தியாவில் அதிக ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் என்றால் அது ஹோண்டா தான். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக இதன் ஆக்டிவாவே இருந்து வருகிறது. ஆக்டிவாவைத் தவிர்த்து டியோ என்ற இன்னொரு மாடலை மட்டுமே ஹோண்டா இந்தியாவில் விற்பனையில் வைத்திருக்கிறது. இரண்டு ஸ்கூட்டர்களுமே 110 சிசி மற்றும் 125 சிசி இன்ஜின்களுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு மேலாக இன்னொரு பிரிவிலும் இப்போது போட்டி அதிகரித்து வருகிறது. அது வேறெதுவும் இல்லை, 150 சிசி அல்லது அதற்கு மேலான இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவு தான். ஹீரோ, யமஹா, டிவிஎஸ், ஏப்ரிலியா ஆகிய நிறுவனங்கள் இந்த மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் ஏற்கனவே நம்பகமான, வாடிக்கையாளர்களுக்கு பரீட்சியமான சில ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்தப் பிரிவில் ஹோண்டாவின் பெயர் சொல்லும் எந்த ஸ்கூட்டரும் தற்போது விற்பனையில் இல்லை. ஆனால் விரைவில் இந்தப் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்த புதிய ஸ்கூட்டர் ஒன்றை ஹோண்டா வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ADV160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைனை இந்தியாவில் ஹோண்டா பதிவு செய்ததாத தகவல் வெளியானதில்லையா, அதே ஸ்கூட்டரை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.
ஆம், ADV160 ஸ்கூட்டரை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான லோக்கலைசேஷன் பணிகளை துரிதமாக ஹோண்டா செய்து வருகிறதாம். இதனால் அடுத்த இரண்டு காலாண்டுகளில், அதாவது 2026ன் இறுதியில் அல்லது 2027ன் தொடக்கத்தில் இந்தப் புதிய ADV160 மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா வெளியிடலாம் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவில் யமஹா ஏராக்ஸ் 155 மற்றும் ஹீரோ ஸூம் 160 ஆகிய மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு நேரடிப் போட்டியாக இந்த ஹோண்டா ADV160 இருக்கும்.

இப்போது இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரில் 16 hp பவர் மற்றும் 14.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 157 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது யமஹா ஏராக்ஸை விட, இந்தியாவில் 200 சிசிக்குள் விற்பனை செய்யப்படும் எந்த ஸ்கூட்டரின் இன்ஜின் உற்பத்தி செய்வதை விடவும் கூடுதல் பவர் மற்றும் டார்க் ஆகும்.
அப்படியென்றால், இந்த மேக்ஸி ஸ்கூட்டர் வெளியாகும் போது இது தான் இந்தியாவிலேயே மிகவும் பவர்ஃபுல்லா சப்-200 சிசி ஸ்கூட்டராக இந்த ஹோண்டா ADV160-யே இருக்கும். இத்துடன் 129 மிமி டிராவல் கொண்ட 31 மிமி டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 100 மிமி டிராவல் கொண்ட ட்வின் ஷாக் அப்சார்பர்கள் சஸ்பென்ஷன் செட்டப்புகளையும் இந்த மேக்ஸி ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.
பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 130 மிமி டிரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற மேக்ஸி ஸ்கூட்டர்களில் இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்களே கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஸ்கூட்டரில் முன்பக்கம் 14 இன்ச் மற்றும் பின்பக்கம் 13 இன்ச் வீல்களை ஹோண்டா கொடுத்திருக்கிறது.
மேக்ஸி ஸ்கூட்டர் என்பதால் சற்று அதிகமாக 133 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது. இது யமஹா ஏராக்ஸை விட 7 கிலோ அதிகம், ஆனால் ஸூம் 160-யை விட 9 கிலோ குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் போது விண்டுபிலாஸ்டைத் தடுக்க ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட விண்டு ஷீல்டையும் இந்த 160 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.
780 மிமீ சீட் உயரத்துடன் பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையிலேயே ADV160 இருக்கிறது. 165 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டு சாலைகள் மற்றும் சமதள பாதைகளை எளிதாகக் கடக்கலாம். இந்தியாவில் இது தினசரி பயன்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் அளவிற்கு இருக்காது. டிஜிட்டல் டேஷ்போர்டு, கீலெஸ் இக்னிஷன், ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், LED விளக்குகள், USB சார்ஜர் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை இந்த மேக்ஸி ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் என்ன விலையில் ஹோண்டா வெளியிடலாம் என்பது குறித்த தகவல்கள் இப்போது இல்லை. எனவே வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் அளவை வைத்து ஒப்பிட்டோம். ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட இன்னும் ப்ரீமியமான ஒன்றாக Nmax 155 என்ற மேக்ஸி ஸ்கூட்டரை வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது யமஹா.
பிலிப்பைன்ஸ் நாட்டில் Nmax 155 மற்றும் இந்த ஹோண்டா ADV160 ஆகிய இரண்டு மேக்ஸி ஸ்கூட்டர்களுமே விற்பனையில் இருக்கின்றன. அந்நாட்டில் Nmax 155 ஸ்கூட்டரானது இந்திய மதிப்பிற்கு 2.28 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ADV160 ஸ்கூட்டரானது அதனை விடக் கூடுதலாக இந்திய மதிப்பிற்கு 2.50 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இந்தியாவிலும் யமஹாவின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட கூடுதலான விலையில் புதிய ஹோண்டா ADV160 மேக்ஸி ஸ்கூட்டர் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை இந்தியாவில் 1.43 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது யமஹா. ADV160 ஸ்கூட்டரை இதனை விட சற்று அதிகமாக 1.50 லட்சம் முதல் 1.60 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் ஹோண்டா வெளியிடலாம்.
பவர்ஃபுல்லான, இன்னும் ப்ரீமியமான ஸ்கூட்டர் என்பதால் கூடுதலான விலையில் வெளியிட்டாலும் அதற்குத் தகும் தான். ஆனால், ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரீமியமான அம்சங்கள் சிலவற்றைக் குறைத்துவிட்டு ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் விலையிலேயே கூட புதிய ADV160 ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ப்ரீமியமான வசதிகளை விட இந்திய ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலை ரொம்ப முக்கியம் பிகிலு. ஹோண்டா என்ன முடிவெடுக்கிறது எனப் பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் இப்போது அதிகம் விற்பனையாகிறது என்று சொல்ல முடியாது என்றாலும், விரைவில் வாடிக்கையாளர்கள் அதற்கு அப்டேட் செய்யத் தொடங்கும் போது ஏற்கனவே அங்கே ஒரு ஹோண்டா தயாரிப்பு இருந்தால் தான் போட்டியில் அந்நிறுவனம் நிலைக்க முடியும். மேலும், முன்னணி நிறுவனங்கள் எல்லாமே மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் கடை விரித்திருக்கும் போது 'ஸ்கூட்டர் கிங்'கான ஹோண்டா இல்லையென்றால் எப்படி.


Click it and Unblock the Notifications