இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடுகிறதா ஹோண்டா?
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் பெரும் தோல்வியைச் சந்தித்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தயாரித்து வைத்தை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விற்பனை செய்ய முடியாவில் தவித்து வருகிறது ஹோண்டா. மற்ற நிறுவனங்களிடமிருந்து வித்தியாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்கிறேன் எனக் கோட்டைவிட்டு விட்டது. ஆனால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுடன் மீண்டு வரும் முயற்சியிலும் அந்நிறுவனம் இருக்கிறது.
இந்த நிலையில் தான் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாமா எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் ஹோண்டா விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் யு-கோ (U-Go). இந்த ஸ்கூட்டரை, இப்போதல்ல, 2022ம் ஆண்டே இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டத்துடன் தான் காப்புரிமைக்கு அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஹோண்டா இந்தியாவில் வெளியிட்ட ஆக்டிவா e: மற்றும் QC1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஐரோப்பாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டவை தான். CUV e என்ற பெயரில் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே இந்தியாவில் ஆக்டிவா e: மற்றும் QC1 என்ற பெயரில் வெளியிட்டது ஹோண்டா.
மேலும், தற்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் EM1 e: என்ற பெயரில் ஐரோப்பாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளியிட்டுள்ளது ஹோண்டா. எனவே இதனை இந்தியாவில் அந்நிறுவனம் கொண்டு வரலாம் என நாம் நினைப்பதில் தவறேதும் இல்லை. இந்திய மதிப்பிற்கு 1.21 லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்த யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

50 சிசி எரிபொருள் இருசக்கர வாகனத்திற்கு இணையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த ஹோண்டா யு-கோ இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 1.2 kW பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது அதிகபட்சமாக மணிக்கு 53 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையே கொண்டிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்டாக ஒரு 1.44 kWh பேட்டரி பேக்கே கொடுக்கப்படுகிறது. இந்த சிங்கிள் பேட்டரி பேக்குடன் 65 கிமீ வரையிலான ரேஞ்சை நாம் பெற முடியும். கூடுதல் ரேஞ்சு வேண்டும் என்றால் கூடுதலாக இன்னொரு பேட்டரி பேக்கையும் பெற்றுக் கொள்ளலாம். இரண்டு பேட்டரி பேக்குகளுடன் 130 கிமீ வரையிலான ரேஞ்சைப் பெற முடியும்.
நகரப் பயன்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இந்த யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உலகமெங்கும் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. மிகவும் குறைவான தூரம் மட்டுமே பயன்பாடு கொண்டவர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த யு-கோ இருக்கும். டிசைனை பேட்டன்ட் செய்திருப்பதால் மட்டுமே இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் என்று சொல்ல முடியாது, பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நன்றாக யோசித்துப் பார்க்கும் போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் வாய்ப்புகள் குறைவு தான். 2022ல் இதனை இந்தியாவில் வெளியிடுவது தொடர்பாக அந்நிறுவனம் பரிசீலனை செய்திருக்கலாம். ஆனால் தற்போது அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிட்டத்தட்ட இந்த யு-கோவை ஒற்றை அம்சங்கள் மற்றும் வசதிகளையே கொண்டிருக்கிறது.
இருந்தும் அது தோல்வியைத் தழுவியிருக்கிறது. எனவே அதேபோல் அம்சங்களைக் கொண்ட, டிசைனில் மட்டும் வேறு மாதிரியாக இருக்கும் யு-கோவை இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் வாய்ப்புகள் குறைவு தான். போட்டியாளர்களை நன்கு ஆராய்ந்து, அவற்றை ஒற்றை வகையிலேயே ஹோண்டாவின் அடுத்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications