இந்தியாவில் பல புதிய ஸ்கூட்டர்களை வெளியிட திட்டமிடும் ஹோண்டா
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்தபடியாக அதிகளவிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றால் அது ஹோண்டா. ஹீரோவின் பெரும்பான்மை விற்பனை எப்படி ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கைச் சுற்றியே இருக்கிறதே, அதேபோல் ஹோண்டாவிற்கும் பெரும்பான்மை விற்பனை ஆக்டிவா ஸ்கூட்டரைச் சுற்றித் தான் இருக்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஆக்டிவாவே இருக்கிறது.
ஸ்கூட்டர் கிங் என ஹோண்டாவை நாம் கூறினாலும், அது அடிப்படையில் ஆக்டிவா என்று ஒரு மாடலை வைத்து மட்டும் தான். ஆக்டிவாவைத் தவிர டியோ என்ற மற்றொரு ஸ்கூட்டர் மாடலை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதனைத் தவிர்த்து ஹோண்டாவின் வேறெந்த ஸ்கூட்டர்களும் இந்தியாவில் பெரியளவில் சோபிக்கவில்லை.

எனவே இருசக்கர வாகன விற்பனையைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு புதிய திட்டங்களுடன் தயாராகி வருகிறது ஹோண்டா. அந்த வகையில் இந்தியாவில் தங்களுடைய ப்ரீமியம் பைக் மற்றும் ஸ்கூட்டர் போர்ட்ஃபோலியோவை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கூட்டர்கள் மற்றும் ப்ரீமியம் பைக்குகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறது ஹோண்டா.
ஜென் ஸி மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் தங்களுக்குக் கிடைக்கும் தேர்வுகளை மட்டும் பார்ப்பதில்லை, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுடனும் தங்களுக்குக் கிடைக்கும் தேர்வை ஒப்பிடுகிறார்கள். எனவே சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் சிறந்த தயாரிப்புகளை இந்தியாவிற்குக் கொண்டு வர நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

உண்மையில் இந்தியாவில் தான் மிகவும் குறைவான அளவிலான ஸ்கூட்டர் மாடல்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. பல்வேறு நாடுகளில் குறைந்தபட்சம் 10 ஸ்கூட்டர் மாடல்களையாவது ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. 110 சிசி, 125 சிசி, 160 சிசி எனப் பல்வேறு அளவுகளில் ஒரே அளவிலேயே பல்வேறு ட்யூன்களில் இன்ஜினைக் கொண்டு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா.
இவற்றில் சில ஸ்கூட்டர் மாடல்களை வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக நிறைய ஸ்கூட்டர்களை இந்தியாவில் காப்புரிமையும் செய்துள்ளது அந்நிறுவனம். கடந்த மாதங்களிலேயே ஹோண்டா அப்படி கடந்த ஆண்டுகளல் காப்புரிமை செய்த பல்வேறு ஸ்கூட்டர் மாடல்கள் பற்றி நம் தளத்திலேயே படித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.
க்ளிக் 125, NPF 125, PCX 160, ஏர்பிளேடு 160, யு-கோ எலெக்ட்ரிக், ஸ்கூப்பி உள்ளிட்ட பல்வேறு ஸ்கூட்டர் மாடல்களின் டிசைன்களை இந்தியாவில் ஹோண்டா காப்புரிமைக்குப் பதிவு செய்துள்ளது. 125 சிசி ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு ஹோண்டா கொண்டு வருவதில் பிரச்சினை இருக்காது. ஏனெனில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே இன்ஜினே நிறைய ஸ்கூட்டர்களில் ஹோண்டா பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவில் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இப்படியான முடிவை ஹோண்டா எடுத்திருப்பதில் ஆச்சரியமேதும் இல்லை. இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே ஹோண்டாவின் முதல் மேக்ஸி ஸ்கூட்டரை கூட இந்தியாவில் நாம் பார்க்கவிருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகள் இந்தியாவில் ஸ்கூட்டர் பிரிவு களைகட்டப் போகிறது. அது மட்டும் உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா போன்ற ஒரு முன்னணி நிறுவனம் வெறும் இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருவது கேள்விக்குள்ளான ஒன்று தான். ஹோண்டா போன்ற நிறுவனங்களே வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தேர்வுகளைக் கொடுக்க முன்வரவேண்டும். அதனை இனி செய்யவிருக்கிறது ஹோண்டா. முற்றிலும் புதிய. 125 சிசி மற்றும் 160 சிசி ஸ்கூட்டர்களை அடுத்த சில ஆண்டுகளில் ஹோண்டாவின் மூலம் பார்க்கவிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் சந்தை.


Click it and Unblock the Notifications