இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் புதிய கிளாஸியான ஸ்கூட்டர்
இந்தியாவில் முன்பை விட ஸ்கூட்டர்களின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில விதவிதமான ஸ்கூட்டர்களை வெளியிடுவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டரான ஆக்டிவாவை விற்பனை செய்து வரும் ஹோண்டா, புதிய ஸ்கூட்டர் ஒன்றையும் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கூட்டர் விற்பனையில் ஆக்டிவாவை அடித்துக் கொள்ள இப்போதைக்கு ஆளில்லை. விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டிவிஎஸ் ஜூப்பிட்டரை விட ஒவ்வொரு மாதமும் சுமார் 1 லட்சம் யூனிட்டுகள் வரை ஹோண்டா ஆக்டிவா அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஆனால் ஆக்டிவாவைத் தவிர வேறு எந்த ஸ்கூட்டரும் ஹோண்டாவிற்கு விற்பனையில் சோபிக்கவில்லை. இதனால் தற்போது ஆக்டிவாவுடன் டியோ ஸ்கூட்டரை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் தான் புதிய 125 சிசி ஸ்கூட்டரை ஹோண்டா இந்தியாவில் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது NPF125 என்ற ஹோண்டாவின் 125 சிசி ஸ்கூட்டரைப் பற்றித் தான். இந்த ஸ்போர்ட்டியான மற்றும் கிளாஸியான லுக் கொண்ட ஸ்கூட்டரை இந்தியாவில் இதுவரை ஹோண்டா விற்பனை செய்ததில்லை. சீனா, வியட்நாம் உள்ளிட்ட மற்ற நாடுகளிலேயே விற்பனை செய்து வருகிறது.
எனினும் இந்த NPF125 ஸ்கூட்டரின் டிசைனுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றிருக்கிறது ஹோண்டா. பொதுவாக இந்தியாவில் புதிய தயாரிப்பை வெளியிடுவதற்கு முன்னர் அதன் டிசைனுக்கு நிறுவனங்கள் காப்புரிமை பெறுவது வழக்கம். கடந்த ஆண்டே இந்த ஸ்கூட்டரின் டிசைனுக்கு ஹோண்டா காப்புரிமை பெற்றிருக்கும் நிலையில், இதனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் ஹோண்டா பல்வேறு 125 சிசி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தாலும், குறிப்பாக இந்த NPF125 ஸ்கூட்டரை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. காரணம், ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே 124 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் இந்த ஸ்கூட்டரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரே இன்ஜின் தான் என்றாலும் வேறு ட்யூனிங்கைக் கொண்டிருப்பதால் ஆக்டிவாவில் இருக்கும் 124 சிசி இன்ஜினை விட கொஞ்சம் கூடுதலாக 9.4 hp பவர் மற்றும் கொஞ்சம் குறைவாக 10 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை இந்த NPF125 ஸ்கூட்டரின் இன்ஜின் கொண்டுள்ளது. ஒரே இன்ஜின் தான் என்பதால், இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்டிவாவை விட சற்று அதிக ப்ரீமியம் வசதிகளைக் கொண்ட ஸ்கூட்டராக இந்த NPF125 உள்ளது. இந்த ஸ்கூட்டரில், LED விளக்குகள், LCD டிஸ்பிளே, இரண்டு ஏப்ரன் ஸ்டோரேஜ் கப்பிகள், USB சார்ஜர் மற்றும் குறிப்பாக கீலெஸ் இக்னிஷன் உள்ளிட்ட வசதிகளைக் கொடுத்துள்ளது ஹோண்டா. மேலும் இந்த ஸ்கூட்டரில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியையும் ஹோண்டா கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை விட சற்று கூடுதல் விலையை இந்த NPF125 ஸ்கூட்டர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரை 90,803 ரூபாய் முதல் 95,247 ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹோண்டா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 125 சிசி ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பும் டிமாண்டும் இருக்கிறது. அதனை ஹோண்டாவும், டிவிஎஸ்ஸும் சரியாகப் பயன்படுத்தி வருகின்றன. சுஸுகியையும் உடன் சேர்த்துக் கொள்ளலாம். எனினும் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு சில தேர்வுகளை நிறுவனங்கள் கொடுக்கலாம். குறிப்பாக இதுவரை விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் இல்லாத வசதிகளுடன், புதிய விதமான டிசைன் மற்றும் அம்சங்களைக் கொடுக்கலாம். அந்த வகையில் இந்த NPF125 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் வரவேற்கப்பட வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications