ஹீரோ, ஹோண்டா கம்பெனிகள் பிரியாமல் இருந்திருந்தால்... ஹீரோவை முந்த ஹோண்டாவுக்கு ரூ.1,500 கோடி செலவு!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய அறிமுகங்களினாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய தனது பயணத்தினாலும் நடந்து முடிந்த 2026 மே மாதத்தில் மட்டும் சுமார் 5.18 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. குறிப்பாக, ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் ஹீரோ கம்பெனியையும் முந்திக் கொண்டு முதலிடத்தில் ஹோண்டா உள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், புதிய அறிமுகங்களினாலும், எலெக்ட்ரிக் வாகனங்களினாலும் ஹோண்டா நிறுவனத்தின் 2-வீலர்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2026 மே மாதத்தில் சிறப்பான வளர்ச்சியை ஹோண்டா நிறுவனம் பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலர்களின் எண்ணிக்கை 5.18 லட்சம் ஆகும்.
இது, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே மே மாதத்தில் பதிவான ஹோண்டா 2-வீலர்களின் எண்ணிக்கையை காட்டிலும் 12% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 4.65 லட்சம் யூனிட் 2-வீலர்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கைகள் யாவும் இந்தியாவில் விற்பனை செய்யபட்ட ஹோண்டா 2-வீலர்கள் உடன் சேர்த்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலர்களும் அடங்குகின்றன.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலர்களை மட்டும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், கடந்த மே மாதத்தில் மொத்தம் 4.59 லட்சம் ஹோண்டா 2-வீலர்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 4.17 லட்சம் ஹோண்டா 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த 2025 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 10% அதிகமாகும்.
இந்தியாவில் அன்றாட பயன்பாட்டிற்கான ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்கள் மற்றும் ஷைன் பைக்கிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா ஆனது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்குகிறது. உள்நாட்டு உற்பத்தியை போன்று, ஹோண்டா நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதியும் கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது.
2025 மே மாதத்தில் 47 ஆயிரம் ஹோண்டா 2-வீலர்கள் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் 59 ஆயிரம் ஹோண்டா 2-வீலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி ஆனது 24% அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா 2-வீலர்கள் விற்பனை 2025 மே மாதத்தை காட்டிலும் 12% மட்டுமே அதிகரித்துள்ளது என பார்ப்பதை விட, சுமார் 53 ஆயிரம் ஹோண்டா 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என பார்க்கும்போது மலைக்க வைக்கிறது. இவ்வாறு வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு ஏற்ப தனது உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் முனைப்பில் ஹோண்டா உள்ளது.
பிரபலமான ஜப்பானிய 2-வீலர் நிறுவனமான ஹோண்டாவுக்கு இந்தியாவில் ராஜஸ்தானின் தபுகரா என்கிற பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இங்கு மூன்றாவது உற்பத்தி பிரிவை இணைக்கும் முயற்சியில் ஹோண்டா உள்ளது. சுமார் ரூ.1,500 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் மூலமாக, வருடத்திற்கு கூடுதலாக 6.7 லட்சம் ஹோண்டா 2-வீலர்களை உற்பத்தி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications