வேட்டியை வரிந்து கட்டிய ஜப்பான் நிறுவனம்... இந்தியாவை ஒட்டுமொத்த உலகமும் அண்ணாந்து பாக்க போகுது...
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு, இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருப்பதுதான் இதற்கு காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், ஹோண்டா நிறுவனத்தின் மிக முக்கியமான டூவீலர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
இதன் காரணமாக இந்தியாவில் உள்ள தனது டூவீலர் தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனை ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியாவில் தற்போதைய நிலையில் 4 இடங்களில் டூவீலர் தொழிற்சாலைகள் உள்ளன. அவை கர்நாடகாவில் உள்ள நரசிபுரா, குஜராத்தில் உள்ள விதல்பூர், ராஜஸ்தானில் உள்ள தபுகெரா, ஹரியானாவில் உள்ள மனேசர் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

இதில், கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் டூவீலர்களை உற்பத்தி செய்யலாம். மறுபக்கம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 13 லட்சம் டூவீலர்களையும், ஹரியானாவில் உள்ள தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 40 ஆயிரம் டூவீலர்களையும் உற்பத்தி செய்ய முடியும்.
ஆக மொத்தத்தில் தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வரும் 2028ம் ஆண்டிற்குள் இதை 80 லட்சமாக உயர்த்த ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன்களை படிப்படியாக அதிகரிக்கும் முயற்சியில் ஹோண்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் கூடுதலாக ஒரு தயாரிப்பு லைனை (Production Line) நிறுவுவதற்கு ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அங்கு தற்போதைய நிலையில் மொத்தம் 3 தயாரிப்பு லைன்கள் உள்ளன. இந்த வரிசையில் 4வது தயாரிப்பு லைன் அங்கு செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
இந்த 4வது தயாரிப்பு லைன் அடுத்த ஆண்டு (2027) செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4வது லைன் மூலமாக ஒரு ஆண்டுக்கு 6.50 லட்சம் டூவீலர்களை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் இது உலகின் மிகப்பெரிய டூவீலர் தொழிற்சாலைகளில் ஒன்றாக மாறவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் ஹோண்டா நிறுவனம் அதிகரிக்கவுள்ளது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ராஜஸ்தான் தொழிற்சாலையில் தற்போதைய நிலையில் ஒரு ஆண்டுக்கு 13 லட்சம் டூவீலர்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்தி திறனை ஹோண்டா நிறுவனம் வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக 13.40 லட்சமாக உயர்த்தவுள்ளது. அத்துடன் அங்கு கூடுதலாக ஒரு தயாரிப்பு லைனையும் அமைக்கவுள்ளது.
ராஜஸ்தான் தொழிற்சாலையில் தற்போதைய நிலையில் 2 தயாரிப்பு லைன்கள் உள்ளன. அங்கு புதிதாக அமைக்கப்படவிருப்பது 3வது தயாரிப்பு லைன் ஆகும். 2028ம் ஆண்டிற்குள் இந்த 3வது தயாரிப்பு லைன் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3வது தயாரிப்பு லைன் மூலம் ஒரு ஆண்டுக்கு 6.70 லட்சம் டூவீலர்களை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்.
இவ்வாறு படிப்படியாக பல்வேறு தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனையும் அதிகரித்து, 2028ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இந்தியாவில் தனது ஒட்டுமொத்த உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 80 லட்சம் டூவீலர்கள் என்ற அளவிற்கு உயர்த்த ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து டீம் பிஹெச்பி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள புதிய தயாரிப்பு லைன் மூலமாக 2 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 125 சிசி மற்றும் 160 சிசி ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த விரிவாக்கத்திற்காக ஹோண்டா நிறுவனம் 1,500 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்களுக்கான 'டிமாண்ட்' நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே ஹோண்டா நிறுவனம் அதனுடைய உற்பத்தி திறனை அதிகரிப்பது மிகவும் அவசியமான ஒரு நடவடிக்கை ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டூவீலர்களை விரைவாக டெலிவரி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








