ஒரே மேடையில் 10 புதிய இருசக்கர வாகனங்களை இந்தியாவில் காட்சிப்படுத்தியது ஹோண்டா!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 10 புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற மாடல்களில் சில மாடல்கள் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. சில எதிர்கால இந்திய அறிமுகத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் சில பிரீமியம் உலகளாவிய மாடல்கள், ஹோண்டாவின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த வரிசையில் பெட்ரோல் மாடல்கள் மட்டுமல்லாமல், மின்சார (EV), Flex-Fuel, E85 எரிபொருளில் இயங்கும் மாடல்கள் மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப வாகனங்களும் இடம்பெற்றுள்ளன. இது, இந்தியாவை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றும் ஹோண்டாவின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த காட்சிப்படுத்தல் பார்க்கப்படுகிறது.

இன்று காட்சிப்படுத்தப்பட்ட 10 புதிய மாடல்களில் ஏழு முற்றிலும் புதிய மாடல்களாகவும், ஏற்கனவே உள்ள மூன்று மாடல்களில் சிறிய மாறுதல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டன. பல்வேறு நாட்டு சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்பு வரிசையை உருவாக்கும் ஹோண்டாவின் நீண்டகால அணுகுமுறையை இது வெளிப்படுத்துகிறது.

1. ஹோண்டா ADV160
இந்த நிகழ்ச்சியில் அதிக கவனத்தை ஹோண்டாவின் அட்வென்ச்சர்-ஸ்டைல் மேக்ஸி ஸ்கூட்டரான ADV160 பெற்றது. நகரப் பயன்பாட்டையும் வார இறுதி சுற்றுலா பயணங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல், Yamaha Aerox 155 மற்றும் Hero Xoom 160 போன்ற மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. E85 எரிபொருள் பயன்பாட்டுக்கும் இது தயாராக இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.
2. ஹோண்டா ரெபல் 300
நடுத்தர திறன் கொண்ட க்ரூசர் மோட்டார்சைக்கிளான Rebel 300-ஐ ஹோண்டா இந்தியாவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. குறைந்த சீட் உயரம், ரிலாக்ஸ்டு ரைடிங் பொசிஷன் மற்றும் நவீன வடிவமைப்புடன், க்ரூயிசர் பிரிவில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
3. ஹோண்டா ரெபல் 500
Rebel 300-ன் பெரிய பதிப்பாக Rebel 500 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக செயல்திறன் கொண்ட இரட்டை சிலிண்டர் இன்ஜின் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற அமைப்புடன் வரும் இந்த மாடல், இந்தியாவில் CKD முறையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. ஹோண்டா XR300L
டூயல்-பர்பஸ் மோட்டார்சைக்கிளான XR300L, சாலை மற்றும் லேசான ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், நீண்ட சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் இலகுரக வடிவமைப்பு இதன் முக்கிய அம்சங்களாகும்.

5. ஹோண்டா XR300 Rally
அட்வென்ச்சர் டூரிங் பயணங்களை இலக்காகக் கொண்ட XR300 Rally, பெரிய விண்ட்ஸ்கிரீன், நீண்ட பயணங்களுக்கு ஏற்ற எர்கோனாமிக்ஸ் மற்றும் ராலி-ஸ்டைல் வடிவமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அட்வென்ச்சர் பைக் பிரிவில் இது புதிய தேர்வாக அமையும்.
6. ஹோண்டா QC3
ஹோண்டாவின் புதிய மின்சார ஸ்கூட்டரான QC3, நகரப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. EV வரிசையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
7. ஹோண்டா CB500
புதிய CB500 மோட்டார்சைக்கிளும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய இடம் பெற்றது. மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட இந்த மாடல், தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சமநிலையான செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
8. ஹோண்டா CB350
ஹோண்டாவின் பிரபலமான CB350 மாடலுக்கு புதிய நிறத் தேர்வுகள் மற்றும் சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இயந்திரத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
9. ஹோண்டா CB350 H'ness
CB350 H'ness மாடலும் புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது. ரெட்ரோ-கிளாசிக் பிரிவில் ஹோண்டாவின் போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
10. ஹோண்டா CB350RS
CB350RS மாடலுக்கும் புதிய நிறங்கள் மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இளம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட இந்த ஸ்க்ராம்ப்ளர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிள், புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் தொடர்கிறது.
ஹோண்டாவின் உற்பத்தி கேந்திரமாகும் இந்தியா
ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் தனது உற்பத்தி திறனை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. அதற்கான அடுத்த கட்டமாகவே இந்த 10 தயாரிப்புகள் பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் உருவாக்கப்படும் வாகனங்களை உலகின் பல்வேறு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தையும் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய பொறியியல் திறன் மற்றும் உற்பத்தி திறனை உலகளவில் மேலும் வலுப்படுத்தும் நோக்கம் ஹோண்டாவுக்கு இருப்பது தெளிவாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 10 மாடல்களை காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம், இந்திய சந்தைக்கான தனது எதிர்கால தயாரிப்பு திட்டத்தை ஹோண்டா தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்கள், Flex-Fuel தொழில்நுட்பம், பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் புதிய தலைமுறை ஸ்கூட்டர்கள் என அனைத்து முக்கிய பிரிவுகளிலும் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கமே இந்த அறிவிப்பின் மூலம் தெரிகிறது. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றும் நிறுவனத்தின் திட்டத்திற்கும் இந்த நிகழ்ச்சி முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
