ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவில் ஹோண்டா களமிறக்கும் புதிய எலெக்ட்ரிக் பைக்! அரசிடம் இருந்து அனுமதி கிடைச்சாச்சு
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycles & Scooters India) நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொஞ்சம் தாமதமாகவே அறிமுகம் செய்தது என சொல்ல வேண்டும். தாமதமாக துவங்கினாலும் குறுகிய காலத்தில் ஆக்டிவா இ (Activa E) மற்றும் க்யூ.சி1 (QC1) என இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து ஹோண்டா ஷாக் கொடுத்தது.
அந்த வரிசையில் 'ஏர்பிளேடு' (Airblade) என்கிற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ஹோண்டா களமிறக்க உள்ளதாகவும், அதற்கான காப்புரிமையை இந்தியாவில் பெற்றுள்ளதாகவும் சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். அந்த வரிசையில், டபிள்யூ.என்7 (WN7) என்கிற எலெக்ட்ரிக் பைக்கையும் இந்தியாவில் ஹோண்டா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், ஏர்பிளேடு ஸ்கூட்டரை போன்று டபிள்யூஎன்7 எலெக்ட்ரிக் பைக்கிற்கான காப்புரிமையையும் ஹோண்டா இந்தியாவில் பெற்றுள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த மே 1ஆம் தேதியே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், அதுகுறித்த தகவல்கள் இப்போதுதான் வெளிவர துவங்கியுள்ளன. டபிள்யூஎன்7 எலெக்ட்ரிக் பைக்கின் தோற்றத்திற்கான காப்புரிமையை ஹோண்டா பெற்றுள்ளதால், இனி இந்த டிசைனில் வேறெந்த நிறுவனமும் பைக்கை உருவாக்க முடியாது.
ஹோண்டா நிறுவனத்தின் டபிள்யூஎன்7 எலெக்ட்ரிக் பைக் ஆனது 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜப்பானில் நடைபெற்ற கண்காட்சியில் கான்செப்ட் (Concept) ஆக காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டபிள்யூஎன்7 எலெக்ட்ரிக் பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், இது மிகவும் எதிர்கால தோற்றத்தை கொண்டிருப்பதை படங்களில் காணலாம். இந்த பைக்கின் முன்பக்கம் ஆனது ரோபோட்களின் முகத்தை உள்ளது. நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Streetfighter) பைக்குகளை போன்று இந்த எலெக்ட்ரிக் பைக்கின் உடலை சுற்றிலும் பேனல்கள் குறைவாக உள்ளன.
பெட்ரோல் டேங்க் போன்ற போலியான தோற்றத்தை சிங்கிள்-பீஸ் பேனலில் வழங்கியுள்ளனர். ஹேண்டில்பார் நன்கு அகலமாக உள்ளது. ஹேண்டில்பாரின் இருமுனைகளிலும் மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அகலமான பைக்கின் முகப்பு பகுதியில் மெல்லியதான டிசைனில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு மேலேயும், கீழேயும் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பின் சக்கரத்தில் மோனோகாக் சப்-ஃபிரேம் உடன் இணைக்கப்பட்ட சிங்கிள்-பீஸ் இருக்கை பார்ப்போரை கவர்கிறது. பின் சக்கரத்துடன் ஒருபக்கமாக ஸ்விங்கார்ம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில் தான், பின் சக்கரத்துடன் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, எலெக்ட்ரிக் மோட்டார் உடனும் பின் சக்கரம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பின் சக்கரத்தின் மறுபக்கம் ஆனது எதுவும் இல்லாமல் விசித்திரமாக உள்ளது.
ஹோண்டா டபிள்யூஎன்7 எலெக்ட்ரிக் பைக்கில் 50.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. 600சிசி என்ஜினுக்கு இணையான திறன் கொண்ட இந்த எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 67.5 பிஎச்பி மற்றும் 100 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இதற்கு முன்னதாகவும் இவ்வாறு பல்வேறு வாகனங்களுக்கான காப்புரிமைகளை இந்தியாவில் பெற்றுள்ளது. ஆனால் அதன்பின் அவற்றுள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவை மிக சில மட்டுமே. ஆதலால், ஜப்பானில் விற்பனையில் உள்ள டபிள்யூஎன்7 எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு பாதிக்கு பாதி தான் வாய்ப்புள்ளது. ஒருவேளை அறிமுகம் செய்யப்பட்டாலும், அதிக விலை கொண்டதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications