புதிய 100சிசி ஹீரோ பைக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன? வெறும் 15% பெட்ரோல் இருந்தால் போதும்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 85% எத்தனாலில் இயங்கக்கூடிய தனது முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் மோட்டார்சைக்கிள்களை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர்களே நேரில் வந்து இந்த புதிய ஹீரோ பைக்குகளை அறிமுகம் செய்து வைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு இந்த பைக்குகளின் சிறப்பு என்ன? இவை எவ்வாறு இயங்குகின்றன? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பைக்குகளாக ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் விளங்குகின்றன. இதனாலேயே இவை இரண்டிலும் தான் முதற்கட்டமாக ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இவை இரண்டும் வழக்கம்போல் பெட்ரோல் வெர்சனிலும் கிடைக்கும், அதேநேரம் புதிய ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வெர்சனிலும் கிடைக்கும்.

வழக்கமான பெட்ரோல் உடன் வேறு எதாவது ஒரு பொருளை அதிகமாக கலந்து பயன்படுத்தினால் அதனை 'ஃபிளெக்ஸ்-ஃப்யுல்' என அழைக்கிறோம். இதனாலேயே 85% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கக்கூடியதாக இந்த புதிய ஹீரோ பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் கூறியிருந்தோம். பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவது கடந்த பல வருடங்களாகவே நடக்கும் ஒன்றே.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக பெட்ரோலில் எத்தனால் கலந்து விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. துவக்கத்தில் 90% பெட்ரோல் மூலக்கூறுகள் உடன் வெறும் 10% எத்தனால் கலந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின், எத்தனாலின் அளவு 20% ஆக அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் மூலக்கூறுகளின் அளவு 80% ஆக குறைக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றத்தினால் பழைய பெட்ரோல் வாகனங்களில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது அந்த சமயத்தில் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. இருப்பினும், அதில் இருந்து நாம் மெல்ல மெல்ல மீண்டுவந்த நிலையில், இ30 பெட்ரோலுக்கு இந்தியா தயாராகி வருகிறது. அதாவது, 70% பெட்ரோல் மூலக்கூறுகள் + 30% எத்தனால் ஆகும்.
ஆனால், சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது 85% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கக்கூடிய ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளை ஆகும். ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் 97சிசி என்ஜின் எத்தனாலில் இயங்கக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, என்ஜினுக்கு எரிபொருள் செல்லும் விதம் மற்றும் அது தீப்பற்றிக் கொள்ளும் நேரம் திருத்தப்பட்டுள்ளது.
ECU எனப்படும் பைக்கின் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் தன்னிச்சையாக செயல்பட்டு எத்தனாலை கண்டறிந்து அதற்கேற்ப எரிபொருளை என்ஜினுக்கு வழங்குவதையும், எரிபொருள் தீப்பற்றிக் கொள்வதையும் அட்ஜெஸ் செய்யும். மேலும், எத்தனாலுக்கு ஏற்ப பைக்கின் எரிபொருள் குழாய், பெட்ரோல் டேங்கிற்குள் கோட்டிங் மற்றும் எரிபொருள் வடிக்கட்டி மாற்றப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலந்து பயன்படுத்துவதால் என்ஜின் வெளியிடும் ஆற்றல் அளவும் அதிகரித்துள்ளது.
புதிய ஹீரோ ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளில் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 8.56 பிஎஸ் மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 8.3 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். அதுவே, வழக்கமான பெட்ரோல்-மட்டும் வெர்சனில் அதிகப்பட்சமாக 7.9 பிஎச்பி மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையே பெற முடிகிறது. இதற்கு காரணம், எத்தனாலின் அதிக ஆக்டேன் மதிப்பாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான மக்கள் வாங்கக் கூடிய ஹீரோ பைக்குகளை இ85 பெட்ரோலை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றியிருப்பது இந்தியாவில் எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பது உறுதி. இந்த ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளின் என்ஜின் சிஸ்டத்தை பற்றி கேட்பதற்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும், இதன் செயல்முறையானது மிகவும் எளிமையானதே.


Click it and Unblock the Notifications