இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் புதிய ஸ்கூட்டர் இது தான்.. பார்க்கவே அட்டகாசமாக இருக்கு!
இந்தியாவில் ஸ்கூட்டர்களின் கிங் என்றால் அது ஆக்டிவா தான். மற்ற எந்த ஸ்கூட்டர்களும் நெருங்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மாதமும் அதிக யூனிட்டுகள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஹோண்டா நிறுவனமானது இரண்டே இரண்டு ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஒன்று ஆக்டிவா, மற்றொன்று டியோ. இரண்டு ஸ்கூட்டர்களுமே 110 சிசி மற்றும் 125 சிசி என இரண்டு விதமான இன்ஜின்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய ஸ்கூட்டர் சந்தை 125 சிசி ஸ்கூட்டர்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது குறைவான அளவே விற்பனையாகின்றது என்றாலும் அனைத்து நிறுவனங்களுமே 150 சிசி அல்லது அதற்கும் மேலாக பெரிய இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர்களில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. ஹோண்டா இதுவரை அது தொடர்பாக எதுவும் யோசித்ததாகத தெரியவில்லை. ஆனால் இப்போது புதிய ஸ்கூட்டர் டிசைனை இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் தான் இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை மட்டும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளில் எல்லாம் விதவிதமா பல்வேறு ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனையில் வைத்திருக்கிறது. அதில் ஏர்பிளேடு (Airblade) என்ற ஸ்கூட்டரையே இந்தியாவில் தற்போது அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஹோண்டாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த ஏர்பிளேடு ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்படுமா என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

புதிய ஏர்பிளேடு ஸ்கூட்டரின் டிசைனைப் பார்த்தவுடனேயே இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வரும் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டருக்கான சரியான போட்டியாக இது இருக்கும் எனத் தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட ஏராக்ஸ் ஸ்கூட்டரைப் போலவே மேக்ஸி ஸ்கூட்டர் ஸ்டைலை இந்த ஹோண்டா ஏர்பிளேடு ஸ்கூட்டர் மாடலும் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரை வெளிநாடுகளில் 125 சிசி மற்றும் 160 சிசி என இரண்டு வகையான இன்ஜின்களுடன் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இரண்டுமே ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரில் இருப்பதைப் போலவே லிக்விட்-கூல்டு இன்ஜின்கள் தான். எனவே பெர்ஃபாமன்ஸுக்குப் பஞ்சம் இருக்காது. இந்தியாவில் தற்போது 125 சிசியில் லிக்விட்-கூல்டு இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் மாடல் எதுவும் விற்பனையில் இல்லை.
எனவே 160 சிசி இன்ஜின் கொண்ட மாடலையே இந்தியாவில் வெளியீட்டிற்காக ஹோண்டா பரிசீலனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இடத்திலேயே ஹோண்டாவின் ஸ்கூட்டர் ஒன்று தற்போது மிஸ்ஸாகிறது. ஏற்கனவே சிறப்பான விற்பனையைக் கொடுத்து வரும் 125 சிசி பிரிவில் புதிய லிக்விட்-கூல்டு இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை வெளியிடுவதற்கான தேவை எதுவும் இப்போது இல்லை.
ஏர்பிளேடு 160 ஸ்கூட்டரில் 156.93 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 15 hp பவர் மற்றும் 14.8 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 775 மிமீ சீட் உயரம் மற்றும் 113 கிலோ எடையுடன் அனைவரும் எளிதாக பேலன்ஸ் செய்யும் வகையிலான மேக்ஸி ஸ்கூட்டராகவே ஏர்பிளேடு 160 இருக்கிறது.
ஆனால் இதன் கிரௌணடு கிளியரன்ஸ் தான் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்குமா எனத் தெரியவில்லை. வெறும் 145 மிமீ தான் உள்ளது. LED விளக்குகள், USB சார்ஜிங் போர்ட், கீலெஸ் கோ வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கீ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14 இன்ச் வீல்கள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என வசதிகளுக்குப் பஞ்சமில்லை. அனைத்தும் சிறப்பாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போதைக்கு இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைனை இந்தியாவில் காப்புரிமைக்காக மட்டுமே பதிவு செய்துள்ளது ஹோண்டா. இதனை வெளியிடுவது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் அந்நிறுவனத்திடமிருந்து இல்லை. ஆனால், இதனை வெளியிடுவதற்கான தேவை இந்திய சந்தையில் உள்ளது. ஹோண்டாவிடமும் அதற்கான வெற்றிடம் இருக்கிறது. பார்ப்போம் ஹோண்டா என்ன செய்கிறது என்று.


Click it and Unblock the Notifications