பைக் விலையை ரூ.40,000 வரை உயர்த்திய நிறுவனம்.. இப்படி செய்வாங்கன்னு நினைக்கவே இல்லை
இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் இரண்டு 390 சீரிஸ் பைக்குகளின் விலையை உயர்த்தியுள்ளது கேடிஎம். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ட்ரீட் நேக்கட் பைக் மாடலான 390 டியூக் மற்றும் ஆஃப்-ரோடு அட்வென்சர் பைக் மாடலான 390 அட்வென்சர் எக்ஸ் ஆகிய பைக் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது.
390 டியூக் விலை உயர்வு: 390 டியூக் பைக் மாடலானது இதுவரை ரூ.2.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பைக்கின் விலையை தற்போது ரூ.40,000 வரை உயர்த்தியுள்ளது கேடிஎம். இந்த விலை உயர்வைத் தொடர்ந்து 390 டியூக் பைக் மாடலானது இனி ரூ.3.39 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு. அப்போது 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரி 40% ஆக உயர்த்தப்பட்டது. அந்த நேரத்தில் கேடிம், ட்ரையம்ப் மற்றும் பஜாஜின் 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரி உயர்வை வாடிக்கையாளர்களுக்குக் கடத்தாமல், தாங்களே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது பஜாஜ்.
ஆனால் தற்போது அந்த வரி உயர்வின் காரணமாக 390 டியூக் பைக் மாடலின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ட்ரையம்ப் பைக்குகளின் விலைகளை உயர்த்தாமல், அதன் 400 சிசி இன்ஜினை 350 சிசியாக மறுவடிவமைப்பு செய்து அந்தப் புதிய பைக்குகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கேடிஎம் பைக்குகளுக்கும் அதே போன்ற திட்டத்தை பஜாஜ் வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, புதிய சிறிய இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு இடமளிக்கும் நோக்கத்தோடு 400 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியிருப்பதாகத் தெரிகிறது.

390 அட்வென்சர் எக்ஸ் விலை உயர்வு: 390 டியூக் மாடலைப் போல இல்லாமல் இதற்கு முன்னர் 390 அட்வென்சர் எக்ஸ் மாடலின் விலையை கேடிஎம் உயர்த்தியிருக்கிறது. அவற்றைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதன் முதலில் வெளியிடப்பட்ட போது ரூ.2.91 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரும் விலையைக் கொண்டிருந்தது 390 அட்வென்சர் எக்ஸ் பைக் மாடல்.
அதன் பின்னர் ரூ.3.03 லட்சம் வரை என ஒரு முறையும், ஜிஎஸ்டி வரி உயர்விற்குப் பின்பு ரூ.3.26 லட்சம் வரை என ஒரு முறையும் மொத்தம் இரண்டு முறை இந்த பைக்கின் விலையை கேடிஎம் உயர்த்தியுள்ளது. தற்போது மீண்டும் ரூ.17,000 வரை இந்த பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்விற்குப் பின்பு இனி ரூ.3.43 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது 390 அட்வென்சர் எக்ஸ் மாடல்.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து 390 அட்வென்சர் எக்ஸ் பைக் மாடலின் ஆன்-ரோட விலை ரூ.4 லட்சத்தைக் கடக்கும். இவற்றைத் தொடர்ந்து கேடிஎம்மின் மற்ற 390 சீரிஸ் பைக் மாடல்களான 390 எண்டூரோ மற்றும் RC390 ஆகிய பைக் மாடல்களின் விலைகளையும் கேடிஎம் விரைவில் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கு இடையில் 350 சிசி இன்ஜின் கொண்ட டியூக், அட்வென்சர் மற்றும் RC பைக் மாடல்களின் வெளியீடுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விலை உயர்வுடன் நடுத்தர வாடிக்கையாளர்களின் கைகளை விட்டு இன்னும் சற்று தள்ளிச சென்றிருக்கிறது கேடிஎம்மின் 390 சீரிஸ் பைக்குகள். வரும் ஆண்டுகளில் இந்த பைக் மாடல்களின் விலை மேலும் அதிகரிக்கும் போது தொடக்க நிலை பைக் மாடல்கள் என்ற பிரிவில் இருந்து ப்ரீமியம் பைக் மாடல்கள் பிரிவிற்கு இந்த பைக்குகள் மாறிவிடும். இவற்றுக்கு மாற்றாக, இதேபோல் நல்ல பெர்ஃபாமன்ஸைத் தரக்கூடிய கேடிஎம் பைக்குகளை பஜாஜ் வெளியிட வேண்டும் என்பதே சாமானிய பைக் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








