இழுத்து மூட வேண்டிய பைக் கம்பெனியை கை கொடுத்து தூக்கும் டிவிஎஸ்! இதற்கும் பின்னால் முதல்வர் விஜய்?
நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இப்படித்தான் வருடக்கணக்கில் கூறப்பட்டு வருகிறது என்றாலும், இந்த முறை மிக விரைவாகவே நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் டிவிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து மாநிலத்தில் முதலீடுகளையும், விரிவாக்கத்தையும் அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளதால், நார்டன் பிராண்டின் இந்திய வருகை மிக சமீபத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. நார்டன் கம்பெனியை இந்தியாவில் டிவிஎஸ் அறிமுகப்படுத்துவது உண்மையில் உணர்ச்சிப்பூர்வமான விஷயமாகும்.

ஏனெனில், பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் கிட்டத்தட்ட இழுத்து மூடும் நிலையில் உள்ளது. சுமார் 125 வருட வரலாறு கொண்ட பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனமான நார்டனுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக 2020ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் பங்குகளை வாங்கி நார்டனை சொந்தமாக்கியது.
தாயகமான யுகே சந்தையில் மீண்டும் நார்டன் பைக்குகளை விற்பனை செய்வதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் பிரதானமான திட்டம் என்றாலும், இந்திய சந்தைக்கும் நார்டனை கொண்டுவருவதும் அந்த திட்டத்தில் உள்ளது. இருப்பினும், நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்க சுமார் 6 வருடங்களை டிவிஎஸ் எடுத்துக் கொண்டது. ஒருவழியாக யுகே சந்தையில் நீண்ட இடைவெளிக்கு பின் முதல் பைக்கை மிக சமீபத்தில் இந்த 2026 மே மாதத்தில் நார்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

'மேன்க்ஸ் ஆர்' என பெயர் கொண்ட இந்த முதல் பைக்கை தொடர்ந்து, இன்னும் மேலும் மூன்று புதிய பைக்குகளை யுகே-இல் அறிமுகம் செய்ய நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவையாவன, நார்டன் மேன்க்ஸ், அட்லாஸ் மற்றும் அட்லாஸ் ஜிடி ஆகும். அதேநேரம், இந்திய சந்தையிலும் இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக நார்டன் பிராண்டை கால்பதிக்க செய்ய டிவிஎஸ் விரும்புகிறது.
தமிழ்நாட்டில் ஓசூரில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்கு ஏற்கனவே தொழிற்சாலை உள்ளதால், நார்டன் பைக்குகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் பெரியதாக பிரச்சனை இருக்காது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டு முதலமைச்சரும் தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதால், நார்டன் பிராண்டை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு இதுதான் சரியான நேரம் ஆகும்.
மேலும், இந்தியா மற்றும் யுகே இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகி உள்ளதால், குறைந்த விலையில் நார்டன் பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய முடியும். ஆனால், முதற்கட்டமாக நார்டன் பைக்குகள் முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்து, இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யவே திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் யுகே-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நார்டன் மேன்க்ஸ் ஆர் பைக்கில் 1,200சிசி 72-டிகிரி வி4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 206 பிஎச்பி மற்றும் 130 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது நார்டன் மேன்க்ஸ் ஆர் பைக்கிற்கான மற்ற பாகங்கள் யுகே-இல் இருந்துதான் கொண்டுவரப்படும் என்றாலும், பைக்கிற்கான என்ஜின் ஓசூரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நார்டன் பைக்குகளில் அவற்றின் தோற்றத்தை போலவே அவற்றின் விலைகளையும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். டுகாட்டி, பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக நார்டன் பைக்குகள் களமிறக்கப்படுகின்றன. இந்த அளவிற்கு விலைமிக்கவை ஆக கொண்டுவரப்படுவதால், நார்டன் பைக்குகள் இந்திய சந்தையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications