ஜிஎஸ்டி-ஆல் எந்த பலனும் இல்ல! இருந்தும் 2.5 வருஷத்தில் 1 லட்சம் பைக்குகள் விற்பனை சாதாரண விஷயம் இல்ல!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் பைக்குகள் புனேவில் உள்ள பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில விலையுயர்ந்த டிரையம்ப் பைக்குகள் மட்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்தியாவில் பைக்குகள் விற்பனையில் 1 லட்சம் யூனிட்கள் என்கிற இமாலய மைல்கல்லை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் கடந்துள்ளது. 2023ஆம் ஆண்டின் மத்தியில் பஜாஜ் உடனான கூட்டணிக்கு பிறகு டிரையம்பின் விற்பனை வேகமெடுக்க ஆரம்பித்தது. டிரையம்பின் சர்வதேச பொறியியல் தரத்துடன், பஜாஜ் ஆட்டோவின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையம், பிரம்மாண்டமான உற்பத்தி திறன் மற்றும் சப்ளை செயின் இணைந்ததன் மூலமாக 1 லட்சம் பைக்குகள் விற்பனை விரைவாக சாத்தியமாகி உள்ளது.

இந்தியாவில் தற்சமயம் 200க்கும் மேற்பட்ட நகரங்களில், 230க்கும் அதிகமான டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms) மூலமாக டிரையம்ப் செயல்பட்டு வருகிறது. இதனுடன், அவ்வப்போது பைக் ரைடுகளையும் நடத்தியதன் மூலமாக பைக் ஆர்வலர்களின் ஆர்வத்தை ஈர்த்து டிரையம்ப் இந்த விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், டிரையம்பின் விலை குறைவான 400சிசி பைக்குகள் இந்தியாவிலேயே பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் 400சிசி டிரையம்ப் பைக்குகள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், ஜப்பான், ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கும் ஏற்றுமதி (Export) செய்யப்படுகின்றன.

"இந்திய சாலைகளில் 1 லட்சம் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்களை வெறும் 2.5 வருடங்களில் எட்டியிருப்பது பெருமைக்குரிய தருணம்" என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புரோபைக்கிங் (Probiking) பிரிவின் தலைவர் மனிக் நங்கியா தெரிவித்துள்ளார். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தது டிரையம்ப் நிறுவனத்தின் இந்திய பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.
ஏனெனில், இந்த கூட்டணிக்கு பிறகே இந்திய சந்தைக்கு ஏற்ற விலை குறைவான 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்ய டிரையம்ப் முடிவெடுத்தது. இந்த முயற்சியின் மூலம் உருவானவையே டிரையம்ப் ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Scrambler 400 X) பைக்குகள் ஆகும். ஆனால், இந்த பைக்குகளை காட்டிலும் குறைந்த விலையிலான பைக்குகளை களமிறக்க டிரையம்ப் தயாராகி வருகிறது.
இவை டிரையம்பின் புதிய 350சிசி பைக்குகளாக இருக்கும் எனவும், இவற்றின் அறிமுகம் வருகிற 2026 ஏப்ரல் மாதத்தில் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசாங்கம் 350சிசி-க்கும் குறைவான என்ஜினை கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை குறைத்து, 350சிசி-க்கும் மேலான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை அதிகரித்ததை தொடர்ந்து டிரையம்ப் இந்த நடவடிக்கையை கொண்டுவருகிறது.
ஜிஎஸ்டி (GST) குறைவினால் அரசாங்கம் தரப்பில் இருந்து விதிக்கப்படும் வரி குறைவதுடன், 400சிசி பைக்குகளை காட்டிலும் 350சிசி பைக்குகளின் விலைகளும் குறைவதால், இவை நேரடியாக பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் என டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் கருதுகின்றன. புதிய 350சிசி டிரையம்ப் பைக்குகளை பற்றிய விபரங்கள் வருகிற ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் சமயத்தில் வெளிவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பெரும் மோட்டார்சைக்கிள் சந்தையான இந்தியாவில் பைக்குகள் விற்பனையில் 1 லட்சத்தை கடந்திருப்பது டிரையம்ப் நிறுவனத்தின் ஆதிக்கத்தை காட்டுகிறது. அதுமட்டுமின்றி, பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் டிரையம்ப்பின் நிலையையும் காட்டக்கூடியதாக உள்ளது. புதிய 350சிசி பைக்குகளின் அறிமுகத்திற்கு பிறகு டிரையம்ப் பைக்குகளின் விற்பனை இன்னும் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








