'குட்நியூஸ்’... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் மானியம்... நீட்டிக்கப்பட்ட பிஎம் இ-டிரைவ் திட்டம்
மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோர் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் PM E-DRIVE சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2028ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், பல புதிய நிபந்தனைகளுடன் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த திட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டுத் தொகை ரூ.10,900 கோடியிலிருந்து ரூ.11,900 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு மின்சார இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் பெற முடியும். அதாவது, பேட்டரி திறனின் அடிப்படையில் ஒரு kWhக்கு ரூ.2,500 மானியம் வழங்கப்பட்டும். ஏற்கனவே ஒரு kWhக்கு ரூ.5,000 வரையிலும், ஒரு மின்சார இருசக்கர வாகனத்திற்கு ரூ.10,000 வரையிலும் மானியம் பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதிக மின்சார இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் தற்போது இந்த மானியம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், Ex-Factory விலை ரூ.1.50 லட்சம் வரையில் உள்ள மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே இந்த மானியம் பெற முடியும். அதேபோன்று, மானித் தொகையானது வாகனத்தின் விலையில் 15 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிரவும், மற்றொரு நிபந்தனையும் இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டி உள்ளது. வரும் 2028ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கு 2027ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதிக்குள் சமர்ப்பிக்க காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலக்கெடுவுக்கு முன்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1,000 கோடி நிதி தீர்ந்துவிட்டாலும், முன்கூட்டியே இந்த திட்டம் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி பிரதமர் இ டிரைவ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த மார்ச் 31ந் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஜூலை 31ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு, மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தற்போது இந்த திட்டத்திற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications