ராயல் என்ஃபீல்டுக்கு நேரெதிர் போட்டியா சுஸுகி களமிறக்கும் பைக்! குறைவான ஜிஎஸ்டியால் விலையும் குறைவு!
சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகளுக்கு போட்டியாக புதியதாக ஒரு 350சிசி பைக்கை களமிறக்க தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் சுஸுகியின் இருசக்கர வாகனங்களின் வரிசையும் விரிவடைய உள்ளது. இத்தகைய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் சுஸுகியின் இந்த 350சிசி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 350சிசி பைக் மாடல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மட்டுமே அதிக 350சிசி பைக் மாடல்களை விற்பனை செய்தது. ஆனால், சமீபத்தில் 350சிசி-க்கு மேலான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு அதிகரித்ததை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் 350சிசி பைக்குகளை அறிமுகம் செய்துள்ளன.

அதாவது, 400சிசி, 390சிசி என்ஜின் உடன் விற்பனை செய்து வந்த பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு டிரையம்ப், கேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் மாற்றியுள்ளன. இந்த வரிசையில் சுஸுகி நிறுவனமும் அதன் பங்கிற்கு புதிய 350சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்க தயாராகி வருகிறது. ஆனால், சுஸுகி அறிமுகம் செய்வது முற்றிலும் புதிய 350சிசி பைக் ஆகும்.
சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு விதமான ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்களாக வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ், ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 உள்ளிட்ட பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், போட்டி மிகுந்த 350சிசி பைக்குகள் பிரிவில் எந்த மோட்டார்சைக்கிள்களும் இல்லை.

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புத்தம் புதியதாக ஒரு 350சிசி பைக்கை உருவாக்குவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2025 EICMA கண்காட்சியில் சுஸுகியும் உறுதிப்படுத்தி இருந்தது. இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ற ஒரு மோட்டார்சைக்கிளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது சுஸுகி தெரிவித்தது.
இந்தியாவின் 350சிசி பைக்குகள் சந்தை ஆனது தற்சமயம் ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் 350, கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜாவா, யெஸ்டி மற்றும் ஹோண்டா நிறுவனங்களில் இருந்தும் இந்தியாவில் 350சிசி பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், இந்த நிறுவனங்களை காட்டிலும் சுஸுகியின் டீலர்ஷிப் நெட்வொர்க் வலுவானதாக உள்ளது.
அதுமட்டுமின்றி, சுஸுகி நிறுவனத்திற்கு இந்தியாவிலேயே உற்பத்தி தொழிற்சாலை இருப்பதும் இந்த புதிய 350சிசி பைக்கின் விலையை குறைவானதாக நிர்ணயிக்க உதவும். ராயல் என்ஃபீல்டு பைக்குகளை போன்று சுஸுகி பைக்குகளின் விலைகளும் இந்தியாவில் குறைவானதாக உள்ளதால், இந்த புதிய 350சிசி பைக்கின் விலையையும் குறைவானதாகவே எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் 350சிசி பைக்குகள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டின் ஆதிக்கத்தை உடைக்க பல பைக் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமும் முயற்சிக்க உள்ளது. இந்த புதிய 350சிசி சுஸுகி பைக்கின் விலை எந்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட உள்ளது? இந்த பைக்கின் அறிமுகம் எப்போது? என்பது குறித்த விபரங்களுக்கு நமது டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.


Click it and Unblock the Notifications