லட்சக் கணக்கில் விற்று தீரும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள்.. வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள்
முன்பை விட ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இப்போது மவுசு கூடியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நிறைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையான பைக்குகள், மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மற்றும் பிளாட்ஃபார்ம் என முன்பை விட ராயல் என்ஃபீல்டு பைக்குகளும் மேம்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து அதன் விற்பனையில் தற்போது எதிரொலித்து வருகிறது.
மார்ச் 31ம் தேதியன்று நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 முதல் 2016 மார்ச் 31 வரையிலான ஓராண்டு) ராயல் என்ஃபீல்டின் பெர்ஃபாமன்ஸ் குறித்த தரவுகள் கிடைத்திருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பைக்குகளை விற்றுத் தள்ளியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. குறிப்பாக அதன் 350 சிசி பைக் மாடல்கள் லட்சக் கணக்கில் விற்பனையாகித் தீர்ந்திருக்கின்றன.

கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் சுமார் 11.10 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இது 2025ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 23% அதிகமாகும். அதேபோல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் அளவும் 1.31 லட்சம் ஆக 23% வரை உயர்ந்திருக்கிறது. உள்நாடு, வெளிநாடு எல்லாம் சேர்த்து 2026ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 12.39 லட்சம் பைக்குகளை விற்பனை செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு.
இது 2025ம் நிதியாண்டில் 10.10 லட்சமாக இருந்தது. இது ராயல் என்ஃபீல்டுக்கு ஒரு புதிய மைல்கல் விற்பனை அளவாகும். இதே போன்ற விற்பனை வளர்ச்சியை நடப்பு 2027ம் நிதியாண்டிலும் கொண்டு செலுத்த திட்டங்களை வகுத்து வருகிறது அந்நிறுவனம். அதிக விற்பனை என்னும் அதிகமாக தயாரிக்கவும் வேண்டுமல்லவா. எனவே, தயாரிப்பை அதிகரிக்கவும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டின் இந்த வரலாறு காணாத விற்பனைக்கு முதுகெலும்பாக இருப்பவை அதன் 350 சிசி பைக்குகள் தான். முன்னர் 350 சிசி பிரிவில் சில பைக் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த அளவு அபரிமிதமாக அதிகரித்திருக்கிறது.
தற்போது இந்த தொடக்கநிலை பைக் பிரிவில் புல்லட் 350, கிளாஸிக் 350, ஹண்டர் 350, மீட்டியார் 350, கோவான் கிளாஸிக் 350 என ஐந்து மாடல்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இந்த ஐந்து பைக் மாடல்களே 10.87 லட்சம் யூனிட்டுகள் வரை கடந்த நிதியாண்டு விற்பனையாகியிருக்கின்றன.
இதனைத் தவிர்த்து 450 சிசி மற்றும் 650 சிசி பைக்குகளையும் ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதன் விலை காரணமாக குறைவான அளவே அவை விற்பனையாகி வருகின்றன. மேலும், ராயல் என்ஃபீல்டு என்றவுடன் அனைவரது மனக்கண்ணிலும் முதலில் வருவது புல்லட் 350 அல்லது கிளாஸிக் 350 தான். எனவே நிறைய வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு பைக்குகளில் ஒன்றை வாங்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த விற்பனை உயர்வோடு, இந்திய இருசக்கர வாகன விற்பனை சந்தையில் ராயல் என்ஃபீல்டின் சந்தைப் பங்கும் கணிசமான அளவில் உயர்ந்திருக்கிறது. முன்பு 4.48% ஆக இருந்த நிலையில், தற்போது 5.18% ஆக ராயல் என்ஃபீல்டின் சந்தைப் பங்கு உயர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் விற்பனை உயர்ந்த சில பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டும் ஒன்றாக இருக்கிறது.
350 சிசியைக் கடந்து, 450 சிசி பிரிவில் ஹிமாலயன் 450, கொரில்லா 450 மற்றும் ஸ்கிராம் 440 ஆகிய மூன்று பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இதனைத் தொடர்ந்து 650 சிசி பிரிவில், கான்டினென்டல் GT 650, இன்டர்செப்டார் 650, ஷாட்கன் 650, சூப்பர் மீட்டியார் 650, கிளாஸிக் 650 ட்வின், புல்லட் 650 மற்றும் பியர் 650 என ஏழு பைக் மாடல்களை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு பைக வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய வாடிக்கையாளரின் கனவாகவும் ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பல்வேறு காரணங்களினால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்க அதிக வாடிக்கையாளர்கள் தற்போது முன்வருகிறார்கள். அதற்கு நியாயம் செய்யும் வகையில் தொடர்ந்து பைக்குகளை அப்டேட் செய்தும் வருகிறது அந்நிறுவனம்.
முன்னருடன் ஒப்பிடும் போது தற்போது தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு நிறைய தேர்வுகளைக் கொடுத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. மேலும், புதிய புதிய மாடல்களையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதே வேகத்தில் அடுத்தாண்டு இதனை விட இன்னும் அதிக பைக்குகளை விற்பனை செய்ய இலக்கும நிர்ணயித்துள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications








