இப்போ இந்த ஸ்கூட்டருக்குத் தான் இந்தியாவில் மவுசு.. ஏன் இதைப் போட்டி போட்டு வாங்குறாங்கன்னு தெரியுமா?
இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எந்தெந்த ஸ்கூட்டர்கள் விற்பனையில் எந்தெந்த இடங்களைப் பிடித்துள்ளன எனப் பார்க்கலாம். 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த மே மாதம் ஸ்கூட்டர் விற்பனை 27.38 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 7.39 லட்சம் யூனிட்டுகள் விற்பனையுடன், ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் 38.88 சதவீதம் சந்தைப்பங்குகளையும் ஸ்கூட்டர்கள் கைப்பற்றியிருக்கின்றன.
முதலிடத்தில் எந்த ஸ்கூட்டர் இருக்கிறது என்பதை நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஆம், வழக்கம் போல ஆக்டிவாவே தான். கடந்த மே மாதம் சுமார் 2.28 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மிக அதிகளவில் விற்பனை செய்யப்படும் ஒரு மாடலுக்கு, இது நல்ல விற்பனை உயர்வாகும்.

இரண்டாவது இடத்தில் டிவிஎஸ்ஸின் ஜூப்பிட்டர் உள்ளது. கடந்தாண்டு மே மாதம் 1 லட்சத்திற்கும் சற்று குறைவான அளவில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மே மாதம் 27.83 சதவீதம் அதிகமாக 1.27 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது இந்த ஸ்கூட்டர். சுமார் 27,161 ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்கள் கடந்த மேயில் அதிகம் விற்பனையாகியுள்ளது.
வழக்கம் போலவே மூன்றாவது இடத்தில் சுஸூகியின் அக்சஸ் ஸ்கூட்டர் தான் உள்ளது. ஆனால் இதன் விற்பனை கொஞ்சம் சரிந்திருக்கிறது. அதாவது, கடந்தாண்டுன் ஒப்பிடும் போது 49 யூனிட்டுகள் குறைவாக, 75,729 அக்சஸ் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது சுஸூகி. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடல்களில் விற்பனை சரிந்திருக்கும் ஒரே ஸ்கூட்டர் அக்சஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் இடத்தில் டிவிஎஸ்ஸின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் இருக்கிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இதன் விற்பனை எதிர்பாராத அளவில் 52 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த மே மாதம் இந்தியாவில் சுமார் 42,192 ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது டிவிஎஸ் மோட்டார்.
ஐந்தாவது இடத்திலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான். இது பஜாஜின் சேட்டக். இதன் விற்பனையும் கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் சுமார் 38,376 சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது.
அடுத்த ஐந்து இடங்களில் டிவிஎஸ் என்டார்க், ஹீரோ டெஸ்டினி 125, சுஸூகி பர்க்மன், ஹோண்டா டியோ மற்றும் யமஹா ரேZR ஆகிய ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இதில் டெஸ்டினி 125 மற்றும் ரேZR ஆகிய ஸ்கூட்டர்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. டாப் 10 பட்டியலில் இருக்கும் ஸ்கூட்டர்கள் இவை இரண்டும் தான் அதிகபட்ச விற்பனை உயர்வை பதிவு செய்துள்ளன.
ஹீரோ நிறுவனமானது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 76.34 சதவீதம் அதிகமாக, 26,482 டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை கடந்த மே மாதம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதேபோல் யமஹா ரேZR-ன் விற்பனை 64.35 சதவீதம் உயர்ந்து, 21,403 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் விற்பனையும் மென்மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கூட்டர்கள் இரண்டாம் வாகனம் அல்லது இரண்டாம் கட்ட வாகனம் என்ற இடத்தில் இருந்து வேகமாக முதல்நிலை அல்லது முன்னணி வாகனம் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் அதன் பிராக்டிகலிட்டியும், நிறைய பேர் பயன்படுத்தும் வகையில் இருக்கும் டிசைனும் தான்.
கல்லூரி செல்லும் இளம் வயதினர் முதல் பெண்கள், முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஸ்கூட்டர்களை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்பது அதன் முக்கியமான பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. எனவே ஒருவருக்கும் மட்டும் பைக் வாங்குவதைத் தவிர்த்து, குடும்பத்திற்கு ஸ்கூட்டர் வாங்குவதை நிறைய குடும்பங்கள் விரும்பத் தொடங்கியிருக்கின்றன. இதனையே ஸ்கூட்டர்களின் விற்பனை உயர்வும் சுட்டிக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications