டொயோட்டா அறிமுகப்படுத்தும் புதிய ஹைட்ரஜன் ஸ்கூட்டர்.. பயன்பாட்டுச் செலவு ரொம்ப கம்மியாம்
பெட்ரோல்/ டீசலுக்கு மாற்றாக எரிபொருள் தேடி உளகமெங்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. காற்று மாசு இல்லாத அல்லது குறைவான காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய மாற்று எரிபொருள் தொடர்பான தேடல் கடந்த சில தசாப்தங்களாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. CNG, எலெக்ட்ரிக், எத்தனால் என பல்வேறு வகைகளிலும் மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களின் வெளியீடுகளை நாம் பார்த்து வருகிறோம்.
இதில் ஹைட்ரஜனையும் (Hydrogen) மாற்று எரிபொருளாக முன்வைத்து பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதில் முக்கியமான நிறுவனமாக டொயோட்டா இருக்கிறது. இந்த நிலையில் சுஸூகி பர்க்மன் 400 ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக்கூடிய ஸ்கூட்டர் மாடலை டொயோட்டா தற்போது காப்புரிமைக்குப் பதிவு செய்திருக்கிறது.

இருசக்கர வாகனங்கள் அல்லது சிறிய இன்ஜின் கொண்ட வாகனங்களில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை வழங்குவது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய, ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா, சுஸூகி, கவாஸாகி, ஹோண்டா மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்கள் ஒரே அணியில் இணைந்திருக்கின்றன. ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான இருசக்கர வாகனங்களை உருவாக்குவதில் இந்த கூட்டணி கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் புதிய ஸ்கூட்டரின் டிசைன் காப்புரிமைக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான இரண்டு கான்செப்ட் ஸ்கூட்டர் மாடல்களை சுஸூகி இதுவரை காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒன்று 2011ல் ஹைட்ரஜன் ஃப்யூல் செல் ஸ்கூட்டர் மற்றொன்று 2025ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஹைட்ரனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ஸ்கூட்டர். இரண்டிற்கும் இடையே செயல்படும் விதத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன.

தற்போது காப்புரிமைக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் புதிய ஸ்கூட்டர் மாடலின் டிசைனில் மேற்கூறிய இரண்டு ஸ்கூட்டர்களின் பல்வேறு அம்சங்களும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. தற்போது பதிவு செய்யப்பட்டிருக்கும் புதிய மாடலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தனியே வெளியே எடுக்கும் வகையிலான ஹைட்ரஜன் சிலிண்டர் டிசைனை இது கொண்டிருப்பது தான். இதன் மூலம் எளிதாக ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் செயல்முறையை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
ஜப்பானிய நிறுவனங்கள் மட்டுமின்றி இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகியவையும் கூட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையான இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பஜாஜ் நிறுவனமானது சேட்டக் மூலம் ஹைட்ரன் ஸ்கூட்டர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஹைட்ரன் ஃப்யூல் செல் (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பமானது சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத தொழில்நுட்பமாகப் பயன்படுத்துவதற்கான எல்லா ஆற்றலையும் கொண்டிருக்கிறது. இதில் இரசாயன எதிர்வினைகள் மூலமாக ஹைட்ரஜன் ஃப்யூல் செல்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலமே வாகனம் இயக்கப்படும். இதனால் இதனை எலெக்ட்ரிக் வாகனத்தின் ஒரு வகை என்று கூட சொல்லலாம்.
மேலும் பெட்ரோல் அல்லது டீசலைப் பயன்படுத்தினால் புகை வருவது போல இந்த ஹைட்ரஜன் ஃப்யூல் செல்களில் வராது. மாறாக தண்ணீரே தேவையில்லாத பொருளாக வெளியேறும். ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் உலகளவில் இல்லாமல் இல்லை, ஹூண்டாய் நெக்ஸோ என்ற கார் மாடல் பொதுப் பயன்பாட்டிற்கு உலகின் சில பகுதிகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜனில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எங்கேயும் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இருசக்கர வாகனங்களில் எரிபொருள் தேர்வு என்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒன்று பெட்ரோல், இல்லையென்றால் எலெக்ட்ரிக். வேறு தேர்வுகளே இல்லை. CNG இருந்தாலும் ஒரே ஒரு வாகனம் மட்டுமே அந்த வகையில் விற்பனையில் இருக்கிறது. எனவே மாற்று எரிபொருளில் இயங்கும் வகையிலான நிறைய இருசக்கர வாகன தொழில்நுட்பங்கள் சந்தைக்கு பயன்பாட்டிற்கு வரவேண்டும். அதில் ஒன்றாக ஹைட்ரஜன் எரிபொருளும் இணைந்தால் சிறப்பு தான்.


Click it and Unblock the Notifications