பைக்குகள் அதிரடி விலை உயர்வு.. மக்கள் வாங்கனும்னு நினைக்கிறாங்களா இல்லையா!
ட்ரையம்ப் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மாஸ் மார்க்கெட் பைக் மாடல்களின் விலையை ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அந்த பைக்குகளின் விலையை எவ்வளவு உயர்த்தியிருக்கிறது மற்றும் புதிதாக என்ன விலையில் அந்த பைக்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக பெரிய இன்ஜின் கொண்ட ப்ரீமியம் பைக்குகளை மட்டுமே ட்ரையம்ப் விற்பனை செய்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யும் பொருட்டு 400 சிசி இன்ஜினுடன் பல்வேறு புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியது.

அதனைத் தொடர்ந்து 350 சிசி இன்ஜினுடன் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 400 சிசி பைக்குகளை சமீபத்தில் தான் அப்டேட் செய்தது ட்ரையம்ப். அதனைத் தொடர்ந்து அந்த பைக்குகளின் விலையை தற்போது உயர்த்தியிருக்கிறது. இந்த 350 சிசி பைக்குளின் விலையை குறைந்தபட்சமாக 2,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது ட்ரையம்ப்.
தற்போது இந்தியாவில், ஸ்பீடு T4, ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400 X, ஸ்கிராம்பிளர் 400 XC, த்ரக்ஸ்டன் 400 மற்றும் டிராக்கர் 400 ஆகிய ஆறு 350 சிசி பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ட்ரையம்ப். இதில் ஸ்கிராம்பிளர் 400 XC மற்றும் த்ரக்ஸ்டன் 400 ஆகிய பைக்குகள் தான் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு பைக்குகளும் இனி முறையே 2.94 லட்சம் ரூபாய் மற்றும் 2.70 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. ஸ்பீடு 400 பைக்கின் விலை 2,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு இனி 2.34 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ட்ரையம்ப்பின் மிகவும் விலை குறைவான பைக்கான ஸ்பீடு T4 இதுவரை 1.95 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலையை 4,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது ட்ரையம்ப். இனி 1.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்படவுள்ளது.
ட்ரையம்ப்பின் 350 சிசி லைன்-அப்பில் இருக்கும் மற்ற இரண்டு பைக்குகளான ஸ்கிராம்பிளர் 400 X மற்றும் டிராக்கர் 400 ஆகியவை முறையே 2.59 லட்சம் ரூபாய் மற்றும் 2.70 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இனி விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த உயர்த்தப்பட்ட விலைகளானது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கு முன்பாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தற்போதைய குறைவான விலையிலேயே இந்த பைக்குகளை வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ட்ரையம்ப் மட்டுமின்றி பல்வேறு பைக் மற்றும் கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஜூன் 1ம் தேதி முதல் தங்களது தயாரிப்புகளின் விற்பனையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு உயர்வு ஆகிய காரணங்களினால் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழலுக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே ஆண்டுக்கு இரண்டு முறை விலை உயர்வை அமல்படுத்துவதை நிறுவனங்கள் வாடிக்கையாக்கி வருகின்றன. ட்ரையம்ப்பின் தொடக்கநிலை பைக்குகள் தற்போது விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை மாற்றும் அளவிற்கு இந்த விலை உயர்வு இல்லை என்று தெரிகிறது. எனவே இது விற்பனையை பெரியளவில் பாதிக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
'பைக்குள்' என்று தலைப்பில் தவறாக இருந்தது 'பைக்குகள்' என்று சரியாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications