ராயல் என்பீல்டு காலி! அடிமாட்டு விலையில் புது பைக்குகளை களமிறக்கும் இங்கிலாந்து நிறுவனம்! கூட நிக்கறது பஜாஜ்டா
இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான பைக் நிறுவனங்களில் ஒன்று டிரையம்ப் (Triumph). இந்தியாவை சேர்ந்த பஜாஜ் (Bajaj) நிறுவனத்துடன், டிரையம்ப் நிறுவனம் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக 4 பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள டிரையம்ப் ஸ்பீடு 400 (Triumph Speed 400), டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 (Triumph Scrambler 400), டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 (Triumph Thruxton 400) மற்றும் டிரையம்ப் ஸ்பீடு டி4 (Triumph Speed T4) ஆகிய பைக்குகளின் 350 சிசி வெர்ஷன்கள் ஆகும்.

டிரையம்ப் ஸ்பீடு 400, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400, டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 மற்றும் டிரையம்ப் ஸ்பீடு டி4 ஆகிய 4 பைக்குகளிலும் தற்போதைய நிலையில் 399 சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு பதிலாக, புதிதாக 349 சிசி இன்ஜினை வழங்குவதற்கு டிரையம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்கள்தான் இதற்கு காரணம். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறோம். அப்போது 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து வெறும் 18 சதவீதமாக குறைந்தது.

இதன் காரணமாக 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் விலை குறைந்தது. இதன் எதிரொலியாக அந்த பைக்குகளின் விற்பனையும் உயர்ந்தது. ஆனால் 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் விற்பனை மந்தமாக தொடங்கியது. ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதுதான் இதற்கு காரணம்.
அதாவது 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி முன்பு 31 சதவீதமாக இருந்தது. இதில், 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியாகவும், 3 சதவீதம் செஸ் ஆகவும் வசூலிக்கப்பட்டது. இந்த 31 சதவீத வரி, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு விட்டது.
எனவே 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் விற்பனை மந்தமாக தொடங்கியது. இதன் காரணமாகவே நாங்கள் மேலே குறிப்பிட்ட 4 பைக்குகளின் 350 சிசி வெர்ஷன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டிரையம்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிரையம்ப் நிறுவனத்தின் புதிய 350 சிசி பைக்குகள் வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சிஎன்பிசி டிவி18 செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் ஆரம்ப விலை 2.39 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 பைக்கின் ஆரம்ப விலை 2.76 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக்கின் ஆரம்ப விலை 1.95 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்கானது, எக்ஸ் (X) மற்றும் எக்ஸ்சி (XC) என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், எக்ஸ் வெர்ஷனின் ஆரம்ப விலை 2.70 லட்ச ரூபாய் ஆகவும், எக்ஸ்சி வெர்ஷனின் ஆரம்ப விலை 2.97 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே டிரையம்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதன் 350 சிசி வெர்ஷன்களை, இதை காட்டிலும் மிகவும் குறைவான விலையில் நம்மால் எதிர்பார்க்க முடியும். டிரையம்ப் நிறுவனத்தின் புதிய 350 சிசி பைக்குகளின் வருகை, இந்தியவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350), ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350), ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) ஆகிய பைக்குகளுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








