ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமாக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அதுவே, இந்தியாவிற்கு வெளியே முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. இந்த நிலையில், உலகளவில் டிவிஎஸ் மோட்டார் புதிய சாதனையை புரிந்து ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வைத்துள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை அமைத்து பல வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, தொலைத்தூரத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க சந்தைகளிலும் கூட மார்க்கெட் உள்ளது.

இந்த அளவிற்கு பரந்து விரிந்த டிவிஎஸ் மோட்டாரில் இருந்து இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, 3-சக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் விற்பனையில் இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) மற்றும் ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-wheelers) நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது.
இந்தியாவில் மட்டும்தான் இந்த நிலைமை என்று பார்த்தால், உலகளவிலும் 3வது பெரிய 2-வீலர் நிறுவனமாக டிவிஎஸ் உருவெடுத்துள்ளது. ஜப்பானின் யமஹா (Yamaha) நிறுவனத்தை முந்தி இந்த இடத்தை டிவிஎஸ் மோட்டார் பிடித்துள்ளது. இது 2024ஆம் ஆண்டிலேயே நிகழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது குறைந்த வித்தியாசத்தில் டிவிஎஸ் மோட்டாரை யமஹா முந்தி இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டின் விற்பனையில் யமஹாவை டிவிஎஸ் 4.6 லட்ச 2-வீலர்கள் வித்தியாசத்தில் முந்தியுள்ளது. அதாவது, கடந்த 2025ஆம் ஆண்டில் யமஹா 50 லட்சம் 2-வீலர்கள் உலகளவில் விற்பனை செய்துள்ள நிலையில், டிவிஎஸ் மோட்டார் 54.6 லட்ச 2-வீலர்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது.
அதுவே, 2024ஆம் ஆண்டில் டிவிஎஸ் மோட்டார் 45.2 லட்ச இருசக்கர வாகனங்களையும், யமஹா 49.6 லட்ச இருசக்கர வாகனங்களையும் விற்பனை செய்திருந்தன. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள மற்றொரு இந்திய 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் 2024இல் 59.4 லட்ச 2-வீலர்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த 2025இல் 62.5 லட்ச 2-வீலர்களை விற்பனை செய்துள்ளது.
அதுவே, உலகின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பானை சேர்ந்த ஹோண்டா 2024இல் 1.55 கோடி 2-வீலர்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த 2025இல் சுமார் 1.64 கோடி 2-வீலர்களை விற்பனை செய்து மிரள வைத்துள்ளது. ஆனால், இந்திய சந்தையை பொறுத்தவரையில் டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு அடுத்தே ஹோண்டா உள்ளது.
அரிதாக சில மாத விற்பனையில் ஹீரோ மோட்டோகார்பை ஹோண்டா முந்தியிருந்தாலும், பெரும்பாலான மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் தான் இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்ட் ஆகும். இந்திய 2-வீலர்கள் சந்தையில் 19இல் இருந்து 20 சதவீத பங்கை டிவிஎஸ் மோட்டார் கொண்டுள்ளது. இந்தியாவில் 150சிசி பைக்குகளுக்கு எழுந்துவரும் அதிகப்படியான தேவை தான் டிவிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி 2-வீலர் நிறுவனங்களாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள்தான் உலகின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களாக விளங்குவதில் இருந்து இந்திய 2-வீலர் சந்தை எந்த அளவிற்கு பிரம்மாண்டமானது என்பதை அறியலாம். மற்ற இரு நிறுவனங்களை போன்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதால், வரும் ஆண்டுகளிலும் டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த ஆதிக்கம் தொடரும் என்று நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








