இவங்களுக்கு டெலிவிரி செய்யவே கடல் கடந்து சென்ற 2 டிவிஎஸ் ஸ்கூட்டர்ஸ்! ஃபுல் சார்ஜில் 100கிமீ பயணம் உறுதி!!
இந்திய முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம், இரண்டு டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிகன் நகர (Vatican City) அரசுக்கு வழங்கியுள்ளது. புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, வாடிகன் அரசு மற்றும் எக்ஸலன்ஷியா (Exelentia) நிறுவனம் இடையேயான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த டெலிவிரி (Delivery) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'லாஸ்ட்-மைல்' (Last-mile) போக்குவரத்துக்கான நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமான எக்ஸலன்ஷியா, டிவிஎஸ் மோட்டார் இத்தாலி (TVS Motor Italia) நிறுவனத்துடனான கூட்டணியில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் இத்தாலி என்பது இந்திய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இத்தாலியப் பிரிவு என்பதை நான் கூற வேண்டியதில்லை.

இந்தக் கூட்டணி பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து தீர்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாடிகன் நகர அரசு, தனது அன்றாட செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பூஜ்ஜிய-மாசு உமிழ்வு (zero-emission) போக்குவரத்து தீர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன்படி, ஐக்யூப் ஸ்கூட்டர்கள் நகரத்திற்குள் பயணிக்க போதுமான வரம்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவற்றை வழங்குவதால், இது சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.
இந்தக் கூட்டணி குறித்து, டிவிஎஸ் மோட்டார் இத்தாலி நிறுவனத்தின் பொது மேலாளர் ஜியோவான்னி நோடர்பார்டோலோ டி ஃபர்னாரி, "வாடிகன் போன்ற மதிப்புமிக்க சூழலில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு, நம்பகத்தன்மை, எளிதான பயன்பாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட எங்கள் நகர்ப்புற எலெக்ட்ரிக் போக்குவரத்து குறித்த பார்வையை உறுதிப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

எக்ஸலன்ஷியாவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஜியோவான்னி சப்பியா பேசுகையில், "வாடிகன் நகர அரசுடன் மேற்கொண்ட இந்தக் கூட்டணி, குறிப்பிட்ட உணர்திறன் வாய்ந்த நகர்ப்புற மற்றும் நிறுவன சூழல்களுக்கு முழுமையாகப் பொருத்தமான, நம்பகமான போக்குவரத்திற்கு உறுதியாக இருக்கும் எக்ஸலன்ஷியாவின் உறுதிப்பாட்டை பலப்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
டிவிஎஸ் ஐக்யூப், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆகும். வாடிகன் நகருக்கு வழங்கப்பட்ட இந்த இ-ஸ்கூட்டர், ஈக்கோ மோடில் முழு சார்ஜில் 100 கி.மீ வரை செல்லும் திறன்கொண்டது. மேலும், இது டிஎஃப்டி திரை மற்றும் ஸ்மார்ட் எக்ஸொனெக்ட் (SmartXonnect) அமைப்புடன் கனெக்டட் (Connect) அம்சங்களுடன் வருகிறது.
இதன் அமைதியான இயக்கம், நகரத்திற்குள் எளிதாகப் பயணிக்க ஏற்றதாக உள்ளது. இந்தியாவில் ஸ்டாண்டர்ட், எஸ், எஸ்டி (ST) என்கிற மூன்று விதமான வேரியண்ட்களில் ஐக்யூப் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஸ்டாண்டர்ட் வேரியண்ட் 2.2kWh மற்றும் 3.5kWh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் நிலையில், எஸ் வேரியண்ட் 3.5kWh பேட்டரி உடன் மட்டுமே கிடைக்கிறது.
அதேநேரம், விலைமிக்க டாப் வேரியண்ட்டான எஸ்டி பெரிய 5.3kWh பேட்டரி உடன் கிடைக்கிறது. பேட்டரியை பொறுத்து ஸ்கூட்டரின் ரேஞ்சும் மாறுப்படும். ஆனால், வாடிகன் நகர அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது சிறிய அளவிலான 2.2kWh பேட்டரியை கொண்டுள்ளது. முழுமையாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரு ஐக்யூப் ஸ்கூட்டர்கள் வாடிகன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிகன் நாட்டின் வரலாறு மற்றும் அதிக உணர்திறன் கொண்ட சூழலுக்கு ஏற்ற அமைதியான செயல்பாடு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காக டிவிஎஸ் ஐக்யூப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாடிகன் நகர அரசு ஏற்கனவே மேற்கொண்டுள்ள சுற்றுச்சூழல் மாற்றத்தின் ஒரு படிநிலையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இது செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் வாடிகன் அரசின் முக்கியத்துவத்துடன் ஒத்துப்போகிறது.


Click it and Unblock the Notifications








