தமிழ்நாடு பக்கமே வேண்டாம்னு முடிவு பண்ணிடுச்சா டிவிஎஸ்? வட இந்தியாவில் அமைய போகும் புதிய தொழிற்சாலை!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் புதியதாக தொழிற்சாலை ஒன்றை அமைக்க தயாராகி வருகிறது. ஆனால் இந்த தொழிற்சாலை எங்கு அமைய போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அமைவதற்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டாலும், அதிக வாய்ப்பு ஆனது குஜராத் அல்லது மத்திய பிரதேசம் என வட இந்திய மாநிலத்திற்கே உள்ளதாம்.
இந்தியாவின் முன்னணி 2-வீலர் & 3-வீலர் உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டாருக்கு தற்போதைக்கு இந்தியாவில் மூன்று உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றுள் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்தது, தமிழ்நாட்டின் ஓசூரில் அமைந்துள்ள தொழிற்சாலை தான். ஆனால், கர்நாடகாவின் மைசூரில் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நாலாகர்க் என்கிற பகுதிகளிலும் கூட டிவிஎஸ் மோட்டாருக்கு சொந்தமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

இந்த மூன்று தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பணிகள் கிட்டத்தட்ட முழுமையான நிலையை எட்டிவிட்டன. அதாவது, இந்த தொழிற்சாலைகளில் மேலும் கூடுதலாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், டிவிஎஸ் வாகனங்களுக்கு தொடர்ந்து டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் டிவிஎஸ் வாகனங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அப்படியென்றால் அதனை சமாளிக்க, ஏற்கனவே உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது புதிய இடத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவ வேண்டும். இதில், டிவிஎஸ் மோட்டார் தேர்வு செய்துள்ள பாதை, புதிய தொழிற்சாலையை நிறுவுவது ஆகும். டிவிஎஸ் மோட்டாரின் புதிய தொழிற்சாலை ஆனது அதன் தொழிற்சாலைகள் ஏற்கனவே உள்ள தமிழ்நாடு அல்லது கர்நாடகாவில் நிறுவப்படலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும், அதனை காட்டிலும் அதிக வாய்ப்பு டிவிஎஸ் தொழிற்சாலை இல்லாத குஜராத் அல்லது மத்திய பிரதேச மாநிலத்திற்கே உள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதுள்ள தொழிற்சாலைகள் மூலம் வருடத்திற்கு 64இல் இருந்து 65 இலட்சம் வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் உற்பத்தி செய்கிறது. இதனை 2027 மார்ச் மாதத்திற்கு உள்ளாக 68 இலட்சத்தில் இருந்து 72 இலட்சமாக அதிகரித்துவிட வேண்டும் என டிவிஎஸ் இலக்கு கொண்டுள்ளது.
இதைவிட பெரிய இலக்காக, நிறுவனத்தின் ஒரு வருட உற்பத்தி வாகனங்களின் எண்ணிக்கையில் 1 கோடியை 2030ஆம் ஆண்டிற்குள் எட்டிவிட வேண்டும் என டிவிஎஸ் விரும்புகிறது. அதற்கு புதிய தொழிற்சாலை அவசியமாகும். இவ்வாறு உற்பத்தியை டிவிஎஸ் நிறுவனம் தொடர்ந்து அதிகரிக்க விரும்புவதற்கு காரணம், ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்துடனான அதன் கூட்டணி ஆகும்.
ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து மூன்று-சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களையும், சிறிய அளவிலான மைக்ரோ 4-சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களையும் உருவாக்க டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் உடனான புதிய கூட்டணி ஒருபக்கம் என்றால், ஏற்கனவே உள்ள பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்துடனான கூட்டணிக்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் டிவிஎஸ் மோட்டாருக்கு உள்ளது.
ஏனெனில், பிஎம்டபிள்யூ சிஇ 02 (BMW CE 02) என்கிற விலை குறைவான எலெக்ட்ரிக் பைக்கை முழுவதுமாக டிவிஎஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மற்றொரு விலை குறைவான பிஎம்டபிள்யூ பைக்கான எஃப்450 ஜிஎஸ் (F450 GS)-உம் டிவிஎஸ் தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களில் டிவிஎஸ் மோட்டார் பயங்கர பிசியாகி உள்ளது என்பது அதன் எதிர்கால திட்டங்களை பார்த்தாலே தெரிய வருகிறது. இதனை சமாளிக்க வேண்டுமென்றால் அதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனையும் அதிகரிக்க வேண்டும். இதற்காக புதிய தொழிற்சாலையை திறக்க முடிவெடுத்துள்ள டிவிஎஸ் நிறுவனம் அதனை குஜராத்தில் திறந்தால் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கும் வசதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








