3,500 கோடி ரூபாயை கொட்ட போகும் டிவிஎஸ் நிறுவனம்! எதுக்காக தெரியுமா?
இந்தியாவை சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்று டிவிஎஸ் (TVS). தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு டிவிஎஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தற்போது இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.
எனவே நடப்பு 2026-27ம் நிதியாண்டில், வர்த்தகத்தை பெருக்குவதற்காக, சுமார் 3,500 கோடி ரூபாயை முதலீடு (Invest) செய்ய டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D - Research And Development), புதிய தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காக இந்த தொகை செலவிடப்படவுள்ளது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு மொத்தம் 3 இடங்களில் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் ஓசூர், கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலம் நலகர் ஆகிய இடங்களில் அந்த தொழிற்சாலைகள் செயல்பட்டு கொண்டுள்ளன.
தற்போதைய நிலையில் இந்த 3 தொழிற்சாலைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு 6.8 மில்லியன் (68 லட்சம்) வாகனங்களை உருவாக்க முடியும். அடுத்த 12 மாதங்களில் இதை 8.3 மில்லியன் (83 லட்சம்) வாகனங்களாக உயர்த்த டிவிஎஸ் நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

அதாவது அடுத்த ஒரு வருடத்தில் தனது உற்பத்தி திறனில் 1.5 மில்லியன் (15 லட்சம்) வாகனங்களை கூடுதலாக சேர்க்க டிவிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராதாகிருஷ்ணன் (Radhakrishnan) கூறியது பின்வருமாறு:
சந்தையில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல 'டிமாண்ட்' உள்ளது. எனவே எங்கள் உற்பத்தி திறனை நாங்கள் உடனடியாக அதிகரித்தாக வேண்டிய சூழல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். டிவிஎஸ் நிறுவனம் படிப்படியாக தனது எலெக்ட்ரிக் வாகன தொழிலையும் மேம்படுத்தி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஒரு மாதத்திற்கு சுமார் 30 ஆயிரம் முதல் 32 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தி செய்து கொண்டுள்ளது.
கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்த்தப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து இடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோ போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்துள்ளது. அத்துடன் அவற்றின் மைலேஜூம் சிறப்பாக உள்ளது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய தேவையை உருவாக்கியுள்ளன. அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 3,500 கோடி ரூபாயை டிவிஎஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருப்பது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications