ரூ.779 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் ஆலையை அமைக்கிறது அல்ட்ராவைலட்... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு!!
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தித் துறையில் தமிழகம் நாட்டின் மிக முக்கிய கேந்திரமாக மாறி வருகிறது. ஓலா, ஏத்தர், டிவிஎஸ் மற்றும் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அல்ட்ராவைலட் நிறுவனமும் தனது புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
அண்மையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடந்த வெற்றி முதலீட்டாளர் மாநாட்டில் அல்ட்ராவைலட் நிறுவனம் தனது புதிய ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த புதிய ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. ரூ.779 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையில் 4,000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆலையில் அல்ட்ராவைலட் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க உயர்வகை எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படும். கடந்த ஜூன் மாதத்திலேயே தமிழ்நாட்டில் புதிய ஆலையை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனனர் நீரஜ் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் நடந்த தமிழ்நாடு வெற்றி முதலீட்டாளர் மாநாட்டில் இதனை உறுதி செய்யும் வகையில், அல்ட்ராவைலட் நிறுவனம் தமிழகத்தில் புதிய ஆலையை அமைக்க முடிவு செய்து ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலமாக, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் உற்பத்தி திறன் வெகுவாக அதிகரிக்கப்படும். இதன்மூலமாக, ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் ஆலையை அமைத்து மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. டிவிஎஸ் நிறுவனமும் ஓசூரில்தான் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கிருஷ்ணகிரி அருகே 417 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஆலையை அமைந்துள்ளது. இந்த ஆலையின் மூலமாக ஆண்டுக்கு 10 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அதேபோல் லித்தியம் அயான் பேட்டரியை உற்பத்திக்காகவும் புதிய ஜிகாஃபேக்டரி ஆலையை அமைப்பதிலும் தீவிரமாக உள்ளது.
ஓசூர் அருகே ஏத்தர் நிறுவனமும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான ஆலையை அமைத்து உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 4.2 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஓசூரில்தான் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சப்ளையர்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மனித வளமும் சிறப்பாக இருப்பதுடன் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்புத் திட்டங்களும் மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன. எதிர்காலத்தில் நாட்டின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி கேந்திரமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications