ஓலா மாதிரியான கம்பெனிகள் தான் தமிழ்நாட்டுக்கு வருது... கர்நாடகா வளைச்சிப்போட்ட கம்பெனியை பற்றி தெரியுமா?
அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம் சுமார் ரூ.200 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவ தயாராகி வருகிறது. வருடத்திற்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக அல்ட்ராவயலட்டின் இந்த தொழிற்சாலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பகுதியில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது? அல்ட்ராவயலட் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூருவில் இருந்து பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனங்கள் எல்லாம் அவற்றில் ஒன்றுதான். அந்த வரிசையில் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுவரும் மற்றொரு பெங்களூரு கம்பெனி, அல்ட்ராவயலட் ஆகும்.

ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு எல்லாம் தலைமையகம் பெங்களூருவில் இருந்தாலும், அவற்றின் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் ஓசூரில் தான் உள்ளது. ஆனால், அல்ட்ராவயலட் நிறுவனம் தொழிற்சாலையையும் கர்நாடகாவிலேயே பெங்களூருவுக்கு அருகாமையில் கொண்டுள்ளது. தற்போது புதிய உற்பத்தி தொழிற்சாலையையும் கர்நாடகாவில்தான் அமைக்க அல்ட்ராவயலட் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கூட கர்நாடகா மாநில அரசாங்கத்திற்கும், அல்ட்ராவயலட் நிறுவனத்திற்கும் இடையே மிக சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற 'கர்நாடகாவில் முதலீடு' என்கிற நிகழ்ச்சியில் கையெழுத்தாகி உள்ளது. இதனால், புதிய தொழிற்சாலையை அமைப்பதில் மானியம் ஆகவும், உள்கட்டமைப்பு உதவிகளாகவும் கர்நாடகா மாநில அரசாங்கத்திடம் இருந்து அல்ட்ராவயலட் நிறுவனத்திற்கு உதவிகள் கிடைக்கும்.

ஏனெனில், அல்ட்ராவயலட்டின் புதிய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி ஆனது ஆலையை அமைப்பதில் இருந்து, அதனை செயல்படுத்துவது வரையில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன், அல்ட்ராவயலட் நிறுவனம் சார்பில் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுப்பிடிப்புகளும் மேற்கொள்ளப்படும் என்பதால், அது கர்நாடகா மாநில தொழில்துறை வளர்ச்சிக்கும் உதவும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஏற்கனவே இந்தியாவின் இவி உற்பத்தி மையமாக பார்க்கப்படும் கர்நாடகாவின் பொசிஷன் இந்த புதிய தொழிற்சாலை மூலமாக நல்ல நிலைக்கு முன்னேறும்.
ஏற்கனவே கூறியதுபோல், ரூ.200 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் புதிய அல்ட்ராவயலட் தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 1.5 லட்சம் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை போல் இல்லாமல், அதிநவீன தொழிற்நுட்பங்களிலும், செயல்படுதிறன் மிக்க எலெக்ட்ரிக் வாகனங்களிலும் அதிகமாக அல்ட்ராவயலட் முனைப்புக் காட்டி வருகிறது.
இந்த நிறுவனத்தின் எஃப்77 (F77) எலெக்ட்ரிக் பைக் ஆனது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் என்கிற பட்டத்தை பெற்றது மட்டுமின்றி, ஐரோப்பிய சந்தையிலும் அல்ட்ராவயலட் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்று தந்துள்ளது. இதன் மூலமாக, ஐரோப்பிய சந்தைகளிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்த அல்ட்ராவயலட் திட்டமிட்டுள்ளது. அடுத்ததாக, எக்ஸ்47 (X47) எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய அல்ட்ராவயலட் தயாராகி வருகிறது.
அல்ட்ராவயலட் நிறுவனத்திற்கு தற்சமயம் இந்தியா முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் உள்ளன. இதனை இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் 100 ஷோரூம்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள அல்ட்ராவயலட் நிறுவனம், போல்ட்.எர்த் (Bolt.Earth) என்கிற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து டைப்-6 டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (Type-6 DC Fast Charging) நெட்வொர்க்கை உருவாக்க தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா, ஏத்தர் எனர்ஜி நிறுவனங்களுக்கு இணையாக அல்ட்ராவயலட் நிறுவனமும் மார்க்கெட்டில் கவனத்தை பெற்று வருகிறது. ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளிலும் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த பிரம்மாண்டமான தொழிற்சாலையை கொண்டிருக்க வேண்டியது அவசியம். அதற்காக தான் கர்நாடகா அரசின் உதவியுடன் புதிய தொழிற்சாலையை நிறுவ அல்ட்ராவயலட் தயாராகி உள்ளது. புதிய தொழிற்சாலை திறக்கப்பட்ட பின், அல்ட்ராவயலட் நிறுவனத்தில் இருந்து வரிசையாக புது, புது வாகனங்களின் அறிமுகங்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








