இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு தயாராகும் வின்ஃபாஸ்ட்: டீலர்களை தேடும் பணி தொடக்கம்
வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் களமிறங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை வேகப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதற்கான டீலர்களை தேடும் பணியை துவங்கி இருக்கிறது.
வின்ஃபாஸ்ட் இந்தியா இ-மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மின்சார இருசக்கர வாகன டீலர் நெட்வொர்க்கில் இணைய விரும்பும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வரும் 15ந் தேதிக்குள் விண்ணப்பிப்பதற்கு காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மின்சார கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மின்சார இருசக்கர வாகன விற்பனையிலும் களமிறங்க உள்ளது. குறிப்பாக, இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழைய வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், மூன்று மின்சார ஸ்கூட்டர்களுடன் இந்திய இருசக்கர வாகன சந்தையில் கால் பதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள தனது மின்சார இருசக்கர வாகனங்களில் உள்நாட்டு உதிரிபாக உற்பத்தியாளர்களுடனும் நிறுவனம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், எதிர்காலத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்கும் நீண்டகால திட்டமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஆலையில் முதல்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆரம்ப திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்த ஆலையை 1.5 லட்சம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி ஆலையை ஒட்டி சுமார் 200 ஹெக்டேர் நிலத்தைப் பெற்று, எலக்ட்ரிக் பஸ்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான உற்பத்திப் பிரிவுகளை அமைக்கவும் வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக இந்தியாவில் 2 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த புதிய முதலீடு அமையும்.
ஏற்கனவே மின்சார கார்களுக்கான டீலர்களை அதிகரிக்கும் திட்டம் ஒருபுறம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தனியாக டீலர் நெட்வொர்க்கை கட்டமைக்கும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை மட்டுமின்றி, சர்வீஸ் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
அண்மையில் வெளியான ஒரு செய்தியின்படி, இந்தியாவுக்கான மூன்று கார்களுக்கான உள்நாட்டு உதிரிபாகங்களை அதிகம் பயன்படுத்தும் திட்டத்தை வின்ஃபாஸ்ட் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியானது. எனினும், வழக்கம்போல் வெளிநாட்டிலிருந்து முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்வது தொடரும் என்று வின்ஃபாஸ்ட் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது இருசக்கர வாகன சந்தையிலும் கால் பதிப்பதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications


