கார் ஓட்டுபவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில கூடுதல் விஷயங்கள்!
கார் ஓட்டுபவர்கள் சில கூடுதல் விஷயங்களையும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.

பஞ்சரான சக்கரத்தை மாற்றுவது...
கார் ஓட்டுனர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் முதன்மையானதாக கூறலாம். டயர் பஞ்சர் அல்லது டயரில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால் ஸ்பேர் வீலை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். ட்யூப்லெஸ் டயர்களாக இருந்தாலும், ஸ்பேர் வீல் மாற்றும் முறையை தெரிந்து வைத்திருப்பது நல்லது.

இதற்கு ஸ்பேர் வீலை எவ்வாறு மாற்றுவது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். இதற்கான வழிமுறைகளை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்கி இருக்கிறோம். அதனை படிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

டயரில் காற்றழுத்தம்...
டயரில் காற்றழுத்த அளவை அவ்வப்போது சோதித்துக் கொள்வது அவசியம். இதற்கா, பெட்ரோல் நிலையங்களில் க்யூவில் நிற்பதை விட, வீட்டிலேயே காற்றழுத்தத்தை அளவிடும் கருவியை வாங்கி வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் சோதித்து பார்க்கலாம்.

கார் வாங்கும்போது கொடுக்கப்படும் உரிமையாளர் கையேட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் பரிந்துரைத்த அளவுபடி காற்றழுத்தத்தை பராமரிப்பது பல பயன்களை தரும்.
காற்றழுத்தம் சரியாக இருக்கும் பட்சத்தில், மைலேஜ் சிறப்பாக இருக்கும், டயர் தேய்மானம் குறையும். சஸ்பென்ஷன் அமைப்புகளில் பாதிப்புகள் குறைவாக இருக்கும். எஞ்சினுக்கான பளு குறையும்.

டயரில் ட்ரெட் அளவு
டயரில் காற்றழுத்தம் சரியாக இருப்பதுடன், போதுமான ட்ரெட் இருப்பது அவசியம். டயரில் தெறிப்புகள், வீறல்கள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்து பார்க்கவும். டயரில் இருக்கும் Wear bar அளவை வைத்து டயரை மாற்ற வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம். இதுவும் கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

ஆயில் மாற்றுவது...
ஆயில் மாற்றுவது குறித்த விஷயமும் கார் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம். மாதத்திற்கு ஒருமுறையும், நீண்ட தூர பயணம் சென்று வந்த பின்னரும் எஞ்சின் ஆயில் அளவை சோதித்து பார்ப்பது அவசியம்.

கார் எஞ்சின் ஆஃப் செய்த பின்னர் 15 நிமிடங்கள் கழித்து எஞ்சின் ஆயில் அளவை சோதித்து பார்க்கவும்.பானட்டை திறந்து வைத்தால் சீக்கிரமே எஞ்சின் வெப்பம் குறைந்து ஆயில் அளவை சரி பார்க்க முடியும். ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு அளவீடு இருக்கிறது. எனவே, உரிமையாளர் கையேட்டில் படித்து பார்த்து அந்த அளவை தெரிந்து கொள்ளலாம்.

டிப் ஸ்டிக் மூலமாக எஞ்சின் ஆயில் அளவை சரியாக தெரிந்து கொள்ளளவும். தயாரிப்பாளர் பரிந்துரைத்த குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அளவீட்டை பார்த்துக் கொள்வது அவசியம். குறைந்தபட்ச அளவைவிட ஆயில் குறைவாக இருந்தால் உடனடியாக டாப் அப் செய்வது அவசியம்.

அதேபோன்று, ஆயிலின் நிறத்தையும், அடர்த்தியையும் வைத்து ஆயில் மாற்ற வேண்டியதன் அவசியத்தை தெரிந்து கொள்ளலாம். சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் பளபளப்புத் தன்மையுடன் இருந்தால் அது நன்றாக இருக்கிறது.
அதுவே கருப்பு நிறத்திற்கு மாறிவிட்டால் மாற்ற வேண்டியது அவசியம். விரலில் தொட்டு பார்க்கும்போது அதிக கெட்டியாக தெரிந்தாலும் மாற்ற வேண்டும்.

கூலண்ட் லெவல்
எஞ்சின் குளிர்ச்சியாக இருக்கும் நிலையில், கூலண்ட் அளவீட்டையும் சோதித்து பார்ப்பது அவசியம். பிளாஸ்டிக் புட்டியில் குறிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவுகளுக்கு இடையில் கூலண்ட் இருப்பது அவசியம்.
அளவு குறைவாக இருந்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அல்லது கூலண்ட் கைவசம் இருந்தால் டாப் அப் செய்துவிடவும். அதேபோன்று, கூலண்ட் திரவம் செல்லும் அமைப்பில் ஏதேனும் கசிவு இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளவும்.

ஜம்ப் ஸ்டார்ட்
பழைய கார்களில் பேட்டரி செயலிழந்து போகும் வாய்ப்பு அதிகமம். அதுபோன்ற சமயங்களில் இந்த ஜம்ப் ஸ்டார்ட் கைகொடுக்கும். அதாவது, வேறு ஒரு காரின் பேட்டரி மூலமாக உங்களது காரின் எஞ்சினை செல்ஃப் ஸ்டார்ட் செய்வதற்கு இது உதவும்.
இதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அதனை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்கி இருக்கிறோம். அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

நினைவூட்டல்...
காருக்கு ஆயில் மாற்றுவது, கூலண்ட் டாப் அப் செய்வது உள்ளிட்ட வழக்கமான சர்வீஸ் பணிகள் குறித்து டைரி ஒன்றில் எழுதி வைத்துக் கொள்வதும் அல்லது மொபைல்போன் ஆப் மூலமாக பதிவு செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.
சில வேளைகளில் எப்போது ஆயில் மாற்றினோம் என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. டீலர்களில் உங்களது காரின் வரலாறு இருந்தாலும், பழைய கார் வைத்திருப்போர் இந்த முறையை பின்பற்றுவது நல்லது.

மெக்கானிக்
வெளியிடத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்திலோ, அனுபவம் மிக்க மெக்கானிக் அல்லது சர்வீஸ் சூப்பர்வைசர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துக் கொள்ளளவும்.
காரில் பிரச்னைகள் ஏற்படும்போது அவர்களிடத்தில் ஆலோசனைகள் கேட்டுக் கொள்ளலாம். மேலும், காரில் ஏற்படும் பிரச்னை குறித்து தெளிவாக மெக்கானிக்கிடம் விவரிப்பதற்கும் சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வதும் அவசியம்.

சர்வீஸ் மையத்திற்கு செல்லும்போதும்...
காரில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நினைவூட்டல் மொபைல்போன் அப்ளிகேஷன் ஒன்றை தரவிறக்கம் செய்து அதில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.
சர்வீஸ் மையத்திற்கு செல்லும்போது அதனை பார்த்து காரில் இருக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றாக ஜாப் கார்டில் பதிய செய்வதற்கு வசதியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








