IND vs PAK: இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாட அனுமதி.. பாக். பிரதமர் அறிவிப்பு.. நாடகம் நிறைவு
இஸ்லாமாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்போம் என்று மிரட்டி வந்த பாகிஸ்தான், இறுதியில் தனது நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுடன் விளையாட அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றமான சூழல் முடிவுக்கு வந்துள்ளது.
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பு நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது சர்வதேச நெருக்கடி காரணமாக அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

பிரதமரிடம் நடந்த பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் லாகூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விளக்கினார். இந்தப் போட்டியைப் புறக்கணித்தால் ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் ஐசிசியின் நிலைப்பாடு குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
நண்பர்களின் அழுத்தம்
கிரிக்கெட் நட்பு நாடுகளின் கோரிக்கைகளும் பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ள முக்கியக் காரணமாக அமைந்தது. இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தானுக்குக் கடிதம் மூலம் இந்தியாவுடன் விளையாடுமாறு கோரிக்கை விடுத்தன.
குறிப்பாக, யாருக்காகப் பாகிஸ்தான் போராடியதோ, அந்த வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமே, "தயவுசெய்து போட்டியைப் புறக்கணிக்க வேண்டாம், விளையாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டது.
கோலி, ரோஹித்தை விட ஜடேஜாவுக்கு அதிக சம்பளம்.. கில்லுக்கும் ஜாக்பாட்.. பிசிசிஐ ஒப்பந்தம் மாற்றம்
இலங்கை அதிபரின் தலையீடு
இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது இலங்கை அதிபரின் நேரடித் தலையீடுதான். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, "இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான நீண்ட கால நட்புறவைக் கருத்தில் கொண்டும், சர்வதேச கிரிக்கெட்டின் நலன் கருதியும் இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
முடிவுக்கு வந்த நாடகம்
நட்பு நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் ஐசிசியின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர், இறுதியில் இந்தியாவுடன் விளையாட ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில், "அனைத்துத் தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்து, பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேசிய அணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி கொழும்புவில் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் - வங்கதேசம் ட்ரை சீரீஸ்.. நக்வி போட்ட போடு.. ஐசிசி சொன்ன முடிவு
ஆனால், எதற்காக இந்த தேவையற்ற நாடகம்? "பாகிஸ்தான் ஒரு பெரிய சக்தி", "கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு நிகரான சக்தி" என காட்டுவதற்காக நடத்தப்பட்டதே இந்த மோசமான நாடகம். பாகிஸ்தான் எப்படியும் இந்தப் போட்டியை புறக்கணிக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவே இருந்தது. அவ்வாறு செய்தால் அவர்கள் தலைமீது அவர்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். பெரும் வருவாய் இழப்பை பாகிஸ்தான் சந்தித்து இருக்கும். ஆனால், கிரிக்கெட்டில் நாங்கள் "பெரிய தலை" என காட்டுவதற்காக நாடகம் நடத்தி அதை முடிவுக்கும் கொண்டு வந்துள்ளது பாகிஸ்தான்.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








