IND vs PAK: "எங்க ராணுவ தளபதி.." இந்தியாவுடன் ஆட ஒப்புக் கொண்ட பின் மிரட்டல் தொனியில் பேசிய நக்வி
லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் கிரிக்கெட் உலகில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பதற்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, தங்கள் நாட்டு ராணுவத் தளபதியின் பெயரைக் குறிப்பிட்டு மிரட்டல் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறவுள்ளது. வங்கதேச விவகாரத்தினால் இந்தப் போட்டியைப் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், ஐசிசி மற்றும் நட்பு நாடுகளின் அழுத்தத்தால் தற்போது விளையாடச் சம்மதித்துள்ளது.

தளபதி இருக்கார்.. பயம் இல்லை
பாகிஸ்தான் அரசு அனுமதி அளிப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, மொஹ்சின் நக்வி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்தால் ஐசிசி உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும், தடை விதிக்கும் என்று கூறப்படுகிறதே? அது பற்றிக் கவலைப்படுகிறீர்களா?" என்று நக்வியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "நாங்கள் இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்பது உங்களுக்கே தெரியும். எங்கள் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீர் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இருக்கும்போது, எந்தத் தடைகளைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை," என்று மிரட்டல் தொனியில் பதிலளித்தார்.
ஒரு விளையாட்டு வாரியத்தின் தலைவர், ஐசிசி விதிமுறைகள் குறித்த கேள்விக்கு, தங்கள் நாட்டு ராணுவத் தளபதியின் பெயரைப் பயன்படுத்திப் பதிலளித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையில் நக்வி போட்ட இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நாடகம் முடிவுக்கு வந்ததை மூடி மறைக்கவே இது போன்ற வெற்று மிரட்டல்களை அவர் விடுத்து இருக்கிறார்.
IND vs PAK: பாகிஸ்தான் சரண்டர்
மாறிய பேச்சு
முதலில் பாகிஸ்தான் உறுதியாக இந்தியாவுடன் உலகக்கோப்பை போட்டியில் விளையாடாது என ஒரு வாரமாக கூவி வந்த நக்வி, லாகூரில் ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது பேச்சை லேசாக மாற்றினார். "நாங்கள் விருந்தினர்களை மதிப்பவர்கள். ஐசிசி அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டனர். விருந்தினர் என்று வந்துவிட்டால், பழைய கசப்பான சம்பவங்களை மறந்து மன்னித்துவிடுவோம்" என்று கூறினார். இதுவே பாகிஸ்தான் இறங்கி வருவதற்கான முதல் சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.
வங்கதேசத்திற்குச் சலுகை
இதற்கிடையே உலகக்கோப்பைத் தொடரிலிருந்து விலகிய வங்கதேச அணி மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது என்றும், 2031ஆம் ஆண்டிற்குள் ஒரு ஐசிசி தொடரை நடத்தும் உரிமை வங்கதேசத்திற்கு வழங்கப்படும் என்றும் ஐசிசி உறுதியளித்துள்ளது. அனேகமாக அந்த உரிமை 2028 அண்டர்-19 உலகக்கோப்பையாக இருக்கலாம் என கூறப்படுகிறது
T20 WC: சூப்பர் 8 கனவில் நியூசிலாந்து, பாகிஸ்தான்.. இன்று 3 உலகக்கோப்பை போட்டிகள்.. முழு விவரம்
இதனைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் விளையாடப் பச்சைக் கொடி காட்டினார். எது எப்படியோ, ரசிகர்களின் எதிர்பார்ப்பான இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








