உலகக்கோப்பை வென்ற இந்திய U19 அணிக்கு ஒரு ரூபாய் கூட பரிசு இல்லை.. ஐசிசி முடிவின் பின்னணி என்ன?
ஹாராரே: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 6வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆனாலும், கோப்பையை வென்ற இந்திய அணிக்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரப்பிலிருந்து ஒரு ரூபாய் கூட பரிசுத்தொகையாக வழங்கப்படவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய ஜூனியர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. குறிப்பாக 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இவ்வளவு பெரிய வெற்றியைப் பதிவு செய்தும் ஐசிசி ஏன் பரிசுத்தொகை வழங்கவில்லை என்பதற்கான காரணத்தை இங்கே பார்ப்போம்.

ஐசிசி பணம் தராதது ஏன்?
சீனியர் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளுக்குப் பல கோடிகளைப் பரிசாக வழங்கும் ஐசிசி, ஜூனியர் உலகக்கோப்பையில் அந்த முறையைப் பின்பற்றுவதில்லை. இதற்குக் காரணம் ஐசிசியின் விதிமுறைகள் தான். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரை ஐசிசி ஒரு வர்த்தக ரீதியான போட்டியாகப் பார்ப்பதில்லை. மாறாக, இது இளம் வீரர்களின் திறமையை வளர்த்து எடுப்பதற்கான ஒரு 'மேம்பாட்டுத் தொடர்' ஆகவே கருதப்படுகிறது. இந்தத் தொடரின் நோக்கமே வருங்கால நட்சத்திரங்களை உருவாக்குவதுதான்.
இதன் காரணமாக, இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கோ அல்லது இரண்டாவதாக வரும் அணிகளுக்கோ ஐசிசி தனியாகப் பரிசுத்தொகை வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக, உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்காகத் தனியாக நிதியை ஐசிசி வழங்கி வருகிறது.
பிசிசிஐ கையில் தான் உள்ளது
ஐசிசி பரிசுத்தொகை வழங்காவிட்டாலும், இந்திய இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. ஏனெனில், இந்திய கிரிக்கெட் வாரியம் ( பிசிசிஐ) வழக்கமாக ஜூனியர் அணிகள் சாதனை படைக்கும்போது அவர்களைக் கௌரவிக்கும் விதமாகப் பரிசுத்தொகையை வாரி வழங்கும்.
கடந்த 2022ஆம் ஆண்டு யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது, ஒவ்வொரு வீரருக்கும் தலா 40 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட உதவியாளர்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாயும் பிசிசிஐ பரிசாக வழங்கியது.
அதேபோல, 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிகளுக்கு மொத்தமாக 5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
IND vs PAK: பாகிஸ்தானுக்கு 2 கண்டம்.. இந்தியாவுடன் ஆட மறுப்பதால் வந்த வினை.. குரூப் சுற்றோடு பைபை?
விரைவில் அறிவிப்பு
அந்த அடிப்படையில், தற்போது கோப்பையை வென்றுள்ள ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணிக்கும், பயிற்சியாளர்களுக்கு விரைவில் பிசிசிஐ தரப்பிலிருந்து மிகப்பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Credit: Mykhel


Click it and Unblock the Notifications








