மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 உயர்வு? அறிவாலயத்தில் அந்த மெசேஜ்! மா.செக்களுக்கு போன ஸ்டாலின் உத்தரவு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் கலந்துகொள்ள உள்ள இந்த கூட்டத்தின் நோக்கம் என்ன தெரியும்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற புதிய பரப்புரை இயக்கத்தை திராவிட மாடல் அரசு முன்னெடுத்துள்ளது..

இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்பது கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் சமூகத்தின் அடித்தட்டு வரை கொண்டு செல்வதாகும்..
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
குறிப்பாகக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பேருந்துகளில் விடியல் பயணம், தோழி விடுதிகள் மற்றும் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தியதன் மூலம் பெண்கள் வெறும் பயனாளிகள் மட்டுமல்லாமல் மாநில வளர்ச்சியின் முக்கியப் பங்குதாரர்களாக மாறியுள்ளனர் என்பதை இத்திட்டம் வலியுறுத்துகிறது..
தமிழகப் பெண்களின் முன்னேற்றமே ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம் என்ற கொள்கை உறுதியுடன் இந்தச் சாதனைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட உள்ளன.. இந்த இயக்கத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பத்து மகளிரைக் கொண்ட பிரத்யேகக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன..
உலக மகளிர் தினம்
இக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்குத் தொகுதி வாரியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, பிப்ரவரி 23-ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.. உலக மகளிர் தினமான மார்ச் 8ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் இக்குழுவினர் சென்றடைய வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் கால இலக்காகும்..
இதன் மூலம் அரசின் சாதனைகளை விளக்குவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத் திட்டங்களையும் மக்களிடம் நேரடியாகத் தெளிவுபடுத்துவதே இதன் முக்கியச் செயல்பாடாக அமைந்துள்ளது..
அரசின் முக்கிய அறிவிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கான முன்பணமாக மூவாயிரம் ரூபாயும், அத்துடன் கோடைகாலச் சிறப்புத் தொகுப்பாக இரண்டாயிரம் ரூபாயும் சேர்த்து மொத்தம் 5000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..
திராவிட மாடல் 2.0
இது தவிர, வரும் காலத்தில் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மிக முக்கியமான வாக்குறுதியும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக முன்வைக்கப்படுகிறது.. அரசின் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டியதன் அவசியத்தை இல்லத்தரசிகளுக்கு உணர்த்துவதே இந்தப் பரப்புரையின் மையப்புள்ளியாகக் கருதப்படுகிறது..
இந்த மாபெரும் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' வீடு வீடாகச் செல்லும் பரப்புரை இயக்கத்தை முறைப்படுத்துவது மற்றும் அதன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இன்று பிப்ரவரி 20ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது..
இன்று அறிவாலயத்தில் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மண்டலப் பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் பங்கேற்றுப் பரப்புரைக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்..
இந்த ஆலோசனையின் மூலம் தொகுதி வாரியான பயிற்சிக் கூட்டங்களை ஒருங்கிணைத்துத் திட்டமிட்டபடி பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன..
குறிப்பாக, 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் பிரசார ஏற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
Credit: Oneindia


Click it and Unblock the Notifications








